பொய்புரட்டுடன் வெண்ணெய் திருடி
பொய்யர்களை கொன்ற கொற்றவன் நீ
காலத்தை சிறிது நிறுத்திவைத்து
களியாட்டம் போட்ட கள்வன் நீ
கோகுலத்தை சொர்க்கமாய் மாற்றி
பூமகளை மகிழ்வித்த வித்தகன் நீ
கோபியர்களை பித்தர்களாய் மாற்றி
சித்தர்களையும் ஏங்கவைத்த மாதவன் நீ
பால்பற்கள் நடுவே அண்டத்தை
அன்னையிடம் காண்பித்த பாலகன் நீ
வரிசைப்பற்கள் தெரிய ஆசையாய்
என்னிடம் வழிந்த வாலிபன் நீ
சுவாசத்தை ஞானத்தால் கலந்து
புல்லாங்குழல் வாசித்த கிருஷ்ணன் நீ
சிலையென சமைந்த பசுக்களும்
இலையுதிர்க்க மறந்த மரங்களுமானவன் நீ
மௌனத்தை சிரிப்பால் கிழித்து
இதயகானம் பாடிய கண்ணன் நீ
கற்றவைகளை சுத்தமாய் அழித்து
காதலை நிரப்பிய கண்ணையன் நீ
உன்னினைவால் வாடும் என்னை
உன்னிசையால் வருடும் காதலன் நீ
என்னைவிட்டு பிரிந்த வேளையிலும்
என்னகத்தில் நிறைந்துள்ள கருநீலன் நீ
இசைப்பாய் இசைப்பாய் என்றே
இவ்வுலகம் இறைஞ்சுகிறது உன்னிடம்
‘உன் புல்லாங்குழல் எங்கே’
என்றே தேடி அலைகிறது அகிலமும்
மயில்பீலியாட மனைவியர் காதுபட
அண்டமும் பணிவுடன் உன்னை நோக்க
பதில் சொல்வாய் தெளிவாய்
‘என் உயிரான ராதையிடம் அங்கே’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment