காவலனாய் நான் இருந்தாலென்ன
காலவனாய் நான் இருந்தாலென்ன
என் சுகம் மட்டுமே எனக்கு
என்று சுயநலமாய் சிந்தித்து நின்றேன்
காவலனாய் பிறரைக் காத்து
காலவனாய் உன்னகந்தை அழித்தால்
உன் சுகம் என்றும் நிலைக்கும்
என்ற போதனையின் தேவை உணர்ந்தேன்
கவலையுடன் தேடிய மனிதரை
கலைகளின் களஞ்சியத்தில் கண்டபொழுது
எளிமையின் சிகரத்தில் நின்று மௌனம்தனை
எளிமையாக அடக்கியதை கண்டு வியந்தேன்
உண்மையென்று உரைத்தவற்றை
உணர்ந்து நிற்கின்ற மகான்களை
மலைத்துப் பார்த்து நின்ற வேளை
உரிமையுடன் சிரித்தவரை பார்த்து விட்டேன்
இருளான பெயரைக் கொண்டு
இனிமையான மொழிகளின் துணையுடன்
சச்சிதானந்த ஒளியின் விளையாட்டை சிறிது
புரியவைத்த பொறுமையைக் கற்றுக் கொண்டேன்
பிச்சையளிக்கும் இறைவனே அவ்வுடலில்
பிச்சையெடுக்கும் பாத்திரமான இவ்வுயிருக்கு
அமைதியாய் உள்நோக்கி நம்பிக்கையுடன் தேடுவாயென்று
வாய்மொழிந்த ரகசியத்தை கேட்டுக் கொண்டேன்
நானும் நீயும் ஒன்றே என அறிய
பல பிறவிகள் கடந்தாலும்
ஒரு பாதையில் பயணிப்போம் நாம்
என்றே வாழ்த்தியதை என்னென்று சொல்வேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment