Friday, April 06, 2007

மனமும் இதயமும் – உரையாடல் மூன்று

[அன்று செவ்வாய்கிழமை. கவிஞன் திரைபடம் காண திரையரங்கு செல்கிறான். இடைவேளை வருகிறது. வெளியே செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கிறான். அச்சமயம் அவன் மனமும், இதயமும் பேசுவதை கவனிக்க தொடங்குகிறான்....]


மனம் : இதயமா? நீயெங்கே இங்கே?
இதயம் : ஏன்? இங்கு நான் வரக் கூடாதா? சரி. அதை விடு. எப்படி இருக்கிறாய்?

மனம் : நன்றாக இருக்கிறேன். நீ?
இதயம் : நானும்

(மௌனமாய் சில கணங்கள் கழிகிறது.....)

மனம் : ஏன் அமைதியாகிவிட்டாய்?
இதயம் : ஒன்றுமில்லையே

மனம் : சென்ற முறை பேசிய தத்துவங்கள் கேட்டு இதையெல்லாம் நீ விரும்பமாட்டாய் என்று நினைத்தேன்
இதயம் : அது உன் தவறு. நான் புறவுலகையும் அகவுலகையும் ரசிப்பவள்

மனம் : உன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
இதயம் : தத்துவம் பேசினால் திரைபடத்தை ரசிக்கக் கூடாது என்று எங்கேயாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்ன?

மனம் : அது சரி. திரையில் காண்பவைக் கண்டு நிலை தவற மாட்டாயா?
இதயம் : இல்லையென்று நினைக்கிறேன்

யாரோ ஒரு குரல் : இதயமே, உண்மைதானா?

மனம், இதயம் : யார் நீ?

யாரோ : என்னைப் பற்றி இருக்கட்டும். ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்களே….உங்கள் உரையாடல்களை நானும் பல வருடங்களாக கேட்டவன் என்ற முறையில்.............

மனம் : என்ன திமிர்? ஒட்டு கேட்பது தவறல்லவோ?
யாரோ : என்னிடம் அதைப் பற்றி நீ சொல்லாதே. ஹி ஹி... (இருவரையும் பார்த்து) நான் உங்கள் முகமறியா உறவினன்.

இதயம் : சரி. என்ன வேண்டும் உனக்கு?

யாரோ : உங்கள் இருவரிடமும் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். யாரை முதலில் கேட்கட்டும்?

மனம் : இதயம் ஒத்துக் கொண்டதால் நீ பிழைத்தாய். என்னை முதலில் கேள்
யாரோ : நன்றி. ஆரம்பிப்போமா?

மனம் : சரி
யாரோ : கவனமாகக் கேட்டு பதில் கூறு

மனம் : (அலட்சியமாக) சீக்கிரம் கேள். எங்கள் இருவருக்கும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது
யாரோ : (நமுட்டு சிரிப்புடன்) அது எனக்கு தெரியும்

(இதயம் அங்கிருந்து நகர்கிறாள்)

யாரோ : நீ எப்பொழுது பிறந்தாய்?
மனம் : (யோசித்துவிட்டு) தெரியாது

யாரோ : உன் இறப்பைப் பற்றித் தெரியுமா?
மனம் : .............. தெரியாது

யாரோ : இதைப் பற்றி யாராவது உனக்கு கூறினார்களா?
மனம் : இல்லை

யாரோ : ஏன் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை?
மனம் : எனக்கு தோன்றவில்லை

யாரோ : நீ யார் என்பதாவது தெரியுமா?
மனம் : ஆம். நான் ‘மனம்’

யாரோ : ‘மனம்’ என்றால்?
மனம் : எண்ணக் கலவை நான்

யாரோ : எந்த நிறக்கலவை?
மனம் : (பெருமையுடன்) அனைத்து நிறமும் உண்டு

யாரோ : எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?
மனம் : பார்ப்பவை, கேட்பவை, ரசிப்பவை – இவையே எண்ணங்களின் மூலம் ஆகின்றன

யாரோ : அப்படியா? நன்று. யார் பார்க்கிறார்கள்? யார் கேட்கிறார்கள்?
மனம் : உடலின் கண்களும் செவியும்

யாரோ : அருமை. உன் வாழ்க்கை குறிக்கோள் என்ன?
மனம் : பெரிதாக ஒன்றுமில்லை. என்னை பன்மடங்காக பெருக்கிக் கொள்வதில் எனக்கு மிக்க ஆர்வம்

யாரோ : அப்படியெனில் பல வண்ணங்களில் பல பரிமாணங்களில் அனுதினமும் விரிவடைவாய் என்று சொல்?
மனம் : அப்படியும் வைத்துக் கொள்ளலாம்

யாரோ : எண்ணங்களை என்ன செய்கிறாய்?
மனம் : கவிஞனின் வாழ்க்கையில் கலக்கிறேன்

யாரோ : நல்லவையா, கெட்டவையா?
மனம் : எனக்கெப்படி தெரியும்?

யாரோ : அதுவும் சரிதான். கவிஞன் உன்னை மதிக்கிறானா?
மனம் : பல நேரங்களில். (குரலைத் தாழ்த்தி) சில நேரங்களில் இதயத்தை மிகவும் மதிக்கிறான்

யாரோ : உனக்கு இதயத்தின் மேல் காதல் அல்லவோ?
மனம் : உண்டு. ஆனால், என்னை அவள் வீழ்த்துவது எனக்கு பிடிக்கவில்லை

யாரோ : ஓ..... எண்ணங்களை எப்படி கவிஞன் வாழ்க்கையில் கலக்கிறாய்?
மனம் : அவனையும் அறியாமல் பலவித எண்ண அம்புகளை நானாவிதத்திலும் ஒரே நேரத்தில் எய்துகிறேன்

யாரோ : உன்னை புறக்கணிக்கும் பொழுது என்ன செய்கிறாய்? இதயம் தானே என்று விட்டுக் கொடுப்பாயா?
மனம் : (காதில் கிசுகிசுத்தபடி) மாட்டேன். என்னால் முடிந்தளவு கவிஞனை தொந்தரவு செய்வேன். ஒவ்வொரு முறையும் எனக்கே எனக்கு மட்டும் வெற்றி கிட்டும் வரை

யாரோ : இத்தனை கர்வமா? நல்லது. உன் தொந்தரவு தாங்காமல் உன்னை கொல்ல நினைத்தால்?
மனம் : அப்படியும் நடக்குமா?

யாரோ : வாய்ப்புண்டு.
மனம் : என்னை ஏன் பயமுறுத்துகிறாய்? நீ யார்?

யாரோ : பொறுத்திரு........... (சிரித்துக் கொண்டே இதயத்தை உற்று நோக்குகிறான். ஒரு மலரைப் போல் வந்து அமர்கிறாள் இதயம்)

யாரோ : (மென்மையாக) இதயமே, நலமா?
இதயம் : நலம் ஐயா

யாரோ : அன்னியனான என்னை எப்படி ஏற்றுக் கொண்டாய்?
இதயம் : என்னதான் கூறுகிறீர்கள் என்று கேட்போமே என்றுதான்

யாரோ : நன்று நன்று. மனதுடனான உன் உரையாடல்களை கேட்டு சிரித்து விட்டேன்
இதயம் : ஏன்? ஏதாவது தவறா?

யாரோ : தத்துவம் பேசியுள்ளாய். ஆனால் உண்மையில் நீ அப்படியா?
இதயம் : இருக்க முயல்கிறேன்

யாரோ : முயல்வது வேறு, இருப்பது வேறு. (சிரிக்கிறான்)
இதயம் : ..........................

யாரோ : சரி சரி. நான் உன்னை புகழ்ந்தால் என்ன செய்வாய்?
இதயம் : நன்றி கூறுவேன்

யாரோ : உன்னை அன்பு செய்தால்?
இதயம் : நெகிழ்வேன்

யாரோ : உன்னை இகழ்ந்தால்?
இதயம் : மிகவும் துன்பப்படுவேன் ஐயா

யாரோ : புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் அன்பிலும் தெறிக்கும் அகங்காரத்தை காணவில்லையா?
இதயம் : புரியவில்லையே

யாரோ : நீ எத்தனை அப்பாவியாக இருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. ஆனால் கடந்த காலத்தில் வாழ்பவளோ?
இதயம் : செய்நன்றி மறப்பவளல்ல நான்

யாரோ : நிகழ்காலத்தில் வாழ்வது என்று எதை கூறுகிறாய்?
இதயம் : சந்தர்ப்பங்களும் காட்சிகளும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதற்கேற்ப நானும் இருக்கிறேன்

யாரோ : அப்படியெனில் அழுது கொண்டோ, சிரித்து கொண்டோ இருப்பாயோ?
இதயம் : (புன்முறுவல்) துன்பத்தில் நிச்சயம் வலியின் மிகுதியால் கண்ணீர் விடுவேன்

யாரோ : அப்படியா? மகிழ்ச்சியில் எங்ஙனம் உணர்வாய்?
இதயம் : பறப்பதைப் போல் உணர்வேன்

யாரோ : மயங்காதவள், ஏங்காதவள், கோபமில்லை, வஞ்சமில்லை ஆணவமில்லை என்றெல்லாம் மனதிடம் படம் விட்டிருக்கிறாயே, நான் ஒன்று கேட்கட்டுமா?
இதயம் : கேளுங்கள், ஐயா. தெரிந்தால் பதில் தருகிறேன்

யாரோ : உனக்கு பிடித்தோரை உன்னில் இருத்திக் கொள்கிறாய். வேண்டாதோரை ஒதுக்குகிறாய். இது எதனால்?
இதயம் : (முழிக்கிறாள்) நான் இப்படியே வளர்ந்து விட்டேன். மேலும் மனதின் சகவாசமும் தற்பொழுது கூடி விட்டது. அதனால்.........

யாரோ : உன்னைப் பற்றி மட்டும் கூறு. மனதை ஏன் இங்கு இழுக்கிறாய்?
இதயம் : மன்னிக்கவும். உங்களுக்கு தெரியுமா?

யாரோ : ம்ம்ம்ம்.... எனக்கு தெரியும். ஆனால் உன்னைப் பற்றி உனக்கே சரியாக தெரியவில்லை.
இதயம் : (தலைகுனிகிறாள்)

யாரோ : பரவாயில்லை. கவிஞனை மிகவும் பிடிக்குமோ?
இதயம் : ஆம்.

யாரோ : அப்படி வா வழிக்கு. எதனால்?
இதயம் : ‘நான்’ தான் கவிஞன் என்பதால்

யாரோ : ஓ.....அந்த கவிஞனின் உடல் அழிந்தால்?
இதயம் : ஹா....

யாரோ : பிறகு என்னாவாய் என்று தெரியுமா?
இதயம் : நானும் அழிய வேண்டியதுதான்

யாரோ : அவசியமில்லை
இதயம் : எப்படி சொல்கிறீர்கள்?

யாரோ : என்னருகில் இருப்பவளாயிற்றே நீ
இதயம் : அப்படியெனில் தங்களுக்கு அழிவில்லையா?

யாரோ : இல்லை
இதயம் : தாங்கள் யார்?

யாரோ : பொறுத்திரு...............


(இருவரையும் அழைக்கிறான் யாரோ)

யாரோ : உங்களுடன் அளவலாவியதில் மிக்க மகிழ்ச்சி.


மனமே, உன் அழிவு என்று நான் கூறியது உன் எண்ணங்களின் நிறங்களை. ஆம். அவை அனைத்தும் மறைந்து வெண்மையாகி விட வாய்ப்புண்டு நீ இதயத்துடன் சேர்ந்தால்.

இதயமே, உன் பலவீனமே, மனதின் சாயை உன் மேல் படிவதால்தான். மனதை தூய்மைப்படுத்து. உன் பலவீனம் தானாக மறைந்து விடும்.

உங்கள் காதல் அமரத்துவம் அடையட்டும்.

போவதற்கு முன் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானின்றி நீங்கள் இல்லை என்பதை மட்டும் எப்பொழுதும் மறக்க வேண்டாம்.

சரி. நான் வரட்டுமா?

மனமும் இதயமும் : (மரியாதையுடன்) எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தவரே, நன்றி. தாங்கள் யார்?

யாரோ : நான்.... நான்..... நான்தான் உயிர்..... ஆன்மா.

No comments: