விழியிலே காந்தம் கண்டேன்
மொழியிலே ரசனைக் கண்டேன்
எழிலகம் மனதில் கண்டேன்
யாழிசை இனிமைக் கண்டேன்
சிரிப்பிலே மகவைக் கண்டேன்
உரிமையாய் நெருங்கக் கண்டேன்
கரிசனம் நெஞ்சில் கண்டேன்
தரிசனம் வேண்டக் கண்டேன்
நடையிலே மென்மைக் கண்டேன்
உடையிலே எளிமைக் கண்டேன்
ஓடையில் நனையக் கண்டேன்
தடையிலே தவிப்பைக் கண்டேன்
காதலில் பாசம் கண்டேன்
மோதலில் கோபம் கண்டேன்
மாதமும் கடக்கக் கண்டேன்
வேதனை நிலைக்கக் கண்டேன்
ஆணவம் களையக் கண்டேன்
உணர்வுகள் மதிக்கக் கற்றேன்
இணக்கமுடன் வாழக் கற்றேன்
பிணக்கத்தை எதிரியாய் கண்டேன்
அடியிலே இரும்பைக் கண்டேன்
மடியிலே மரணம் கண்டேன்
நடிகனாய் நடிக்கக் கண்டேன்
கடினமில்லா வாழ்வைக் கண்டேன்
கனவிலே அன்பைக் கண்டேன்
நனவிலே அன்பைக் கண்டேன்
இனங்களில் அன்பைக் கண்டேன்
மனங்களில் அன்பைக் கண்டேன்
கலக்கத்தில் அன்பைக் கண்டேன்
பலத்திலும் அன்பைக் கண்டேன்
உலகத்தை அன்புடன் கண்டேன்
இலக்கமே அன்பாய் கண்டேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment