Thursday, April 19, 2007

கண்டேன் கண்டேன்

விழியிலே காந்தம் கண்டேன்
மொழியிலே ரசனைக் கண்டேன்
எழிலகம் மனதில் கண்டேன்
யாழிசை இனிமைக் கண்டேன்

சிரிப்பிலே மகவைக் கண்டேன்
உரிமையாய் நெருங்கக் கண்டேன்
கரிசனம் நெஞ்சில் கண்டேன்
தரிசனம் வேண்டக் கண்டேன்

நடையிலே மென்மைக் கண்டேன்
உடையிலே எளிமைக் கண்டேன்
ஓடையில் நனையக் கண்டேன்
தடையிலே தவிப்பைக் கண்டேன்

காதலில் பாசம் கண்டேன்
மோதலில் கோபம் கண்டேன்
மாதமும் கடக்கக் கண்டேன்
வேதனை நிலைக்கக் கண்டேன்

ஆணவம் களையக் கண்டேன்
உணர்வுகள் மதிக்கக் கற்றேன்
இணக்கமுடன் வாழக் கற்றேன்
பிணக்கத்தை எதிரியாய் கண்டேன்

அடியிலே இரும்பைக் கண்டேன்
மடியிலே மரணம் கண்டேன்
நடிகனாய் நடிக்கக் கண்டேன்
கடினமில்லா வாழ்வைக் கண்டேன்

கனவிலே அன்பைக் கண்டேன்
நனவிலே அன்பைக் கண்டேன்
இனங்களில் அன்பைக் கண்டேன்
மனங்களில் அன்பைக் கண்டேன்

கலக்கத்தில் அன்பைக் கண்டேன்
பலத்திலும் அன்பைக் கண்டேன்
உலகத்தை அன்புடன் கண்டேன்
இலக்கமே அன்பாய் கண்டேன்

No comments: