Friday, April 06, 2007

உன் புல்லாங்குழல் எங்கே? - 3

காற்றில் தவழ்ந்து வரும் உன்னிசையால் உந்தப்பட்டு
மையிடவும் தலைபின்னவும் பட்டாடை உடுத்தவும் மறந்து
அலங்கோல நிலையில் நான் ஓடோடி வந்துனை காண
சிரித்துக் கொண்டே என் காதில் ஆடும் ஜிமிக்கியை ரசித்தபடி
என் குழலை ஒதுக்கி, அன்பு பொங்க என் கரம் பற்றி
அந்நிலவொளியில் என்னைக் கண்டதைத்தான் மறக்க முடியுமா?

அன்றொருநாள் தோழியருடன் அமர்ந்து சிரித்து மகிழும் நேரத்தில்
அவர்களுடன் காதல்மொழிதனை பேசியே உன் விழியால் என்னை அழைக்க
அங்கிருந்து தப்பித்து ஒரு சுனையின் அருகில் உனக்காக காத்திருந்த நேரம்
கலகலக்கும் கண்ணாடி வளையல்களை என் கைகளில் அடுக்கி
கண்ணீர் சிந்தும் என் கரம் பற்றியே அழகுப் புன்னகையுடன்
பட்டாம்பூச்சிகளை துரத்திய கணங்களைத்தான் மறக்க முடியுமா?

அனைவரும் படுத்துவிட்ட இரவு வேளையில் குயிலாய் கூவும்
உன் அழைப்பிதழை ஏற்று கள்ளத்தனத்துடன் உன்னை சந்திக்க நான் வர
என் கரம் பற்றி அமரச்செய்து மறைத்து வைத்திருந்த பொருளை வெளியே எடுத்து
அந்நிலவொளியில் என் கைகளில் சித்திரம் வரைய துவங்க
என்னதென்று பார்த்த என கண்களில் நீர், இதயத்தில் நிறைவு
எனக்கு மிகவும் பிடித்த மருதாணியை நீயிட்ட அந்நாளைத்தான் மறக்க முடியுமா?

உன்னை நினைத்தே பாறையில் அமர்ந்து கவிதை எழுதும் வேளையில்
பின்னிருந்து என் கண்மூடி பின்னலைப் பிடித்திழுத்து
செவிகளில் கலகலவென ஏதோவொன்றை ஒலிக்க செய்ய
கோபத்தில் அங்கிருந்து நடக்க எத்தனித்த என் கரம் பற்றி
கண்களால் மன்னிப்பு கோரி, என் கால்களில் கொலுசை அணிவிக்க
அங்கேயே அமர்ந்து மகிழ்ச்சியில் விம்மி விம்மி நான் அழுததைத்தான் மறக்க முடியுமா?

இதோ மூப்படைந்த நிலையிலும் ஒளிவீசும் நினைவுகளே
என் வாழ்க்கை துணையாக, வாழ்வை வண்ணமயமாக்க
அவ்வப்பொழுது என் இடுப்பில் செருகி வைத்திருக்கும்
உன் புல்லாங்குழல் எடுத்து நான் ஊதும் வேளையில்
நந்தவனத்து பறவைகளும் கறவைகளும் என்னை சூழ்கிறதே
இவ்வுலகமே சிலிர்க்கும் அளவு உரைப்பாய், ‘என் ராதையே குழலுக்கு இனியவள்’

No comments: