[இதோ தனிமையில் அமர்ந்திருக்கிறேன். மனம் தானாக சுருள் சுருளாய் பழைய நினைவுகளில் நுழைகிறது. காதலனைத் தொலைத்த வாழ்வு, காதலை மறவாமல் வாழும் வாழ்வு, கடமையை நினைவு கூறும் வாழ்வு, காதலியாய் காத்திருக்கும் வாழ்வு, காதலன் உதறிவிட்ட வாழ்வு என்று பல பரிமாணங்களில் என் வாழ்க்கை செல்வதை உணர்கிறேன். அதிலிருந்து விடுபட முடியாமல், அதன் தாக்கத்தை உணர்கிறேன். எனக்கென்று தூது செல்ல யாருமில்லையாதலால், என் நண்பனான தென்றலை அழைத்து பேசுகிறேன்.....]
தென்றலே, என் கதையை கேட்பாயோ
மனங்கசிந்து கண்ணீர் சிந்தி உருகுவாயோ
புயலென் வாழ்வில் வீசியதை அறிவாயோ
கருணை நெஞ்சமே, இக்கோரிக்கையை ஏற்பாயோ
என் காதலனிடம் அவற்றை முறையிடுவாயோ
காத்திருக்கும் எனக்கு பதிலையும் தருவாயோ
மலராய் குழந்தையாய் குதித்தவள் நான்
அழகை அறிவை உணராதவள் நான்
மகிழ்வோடு விளையாடி சிரித்தவள் நான்
கடமையைத் தவறாமல் செய்தவள் நான்
மௌனமாய் சிறகை விரித்தவளும் நான்
அங்கே கண்ணனைக் கண்டு மயங்கியவளும் நான்
பாடலை முணுமுணுத்தே என்வீட்டினுள் நுழைந்தான்
அனைவர் முன்னே என்கண்ணையும் கண்டான்
தன்னழகால் என்னை செயலிழக்க செய்தான்
மறைவாய் கதைகள் பலபேசிக் களித்தான்
காதலுடன் என் கைபிடிக்கவே துடித்தான்
என் மலைப்பைக் கண்டு கடகடவென நகைத்தான்
அவன் அழகிய கருப்பு, நானோ வெறும் சிவப்பு
எம் நெஞ்சில் நிலைத்தது அவன் இருப்பு
அவனுக்கு பேசும் கண்கள், எனக்கோ ஒளியற்ற கண்கள்
அவன் அனுப்பியதோ காதல் கணைகள்
அவன் ஊறிந்த அறிவாளி, நான் கடைந்தெடுத்த முட்டாள்
ஆனாலும் கூறினான் கருணையுடன் ‘என்னையும் ஏற்றாள்’
அவன் பேச்சாற்றலில் சிறந்தவன், நான் மௌனமாய் மறைபவள்
இருப்பினும் என்னிடம் நிறைய பேசிப் பகிர்ந்தான்
அவன் மணமானவன் என்றால் நானும் மணமானவளே
இருப்பினும் அன்பே முக்கியம் என்று தேற்றினான்
அவனுக்கோ காதலிகள் தொல்லை, எனக்கோ ஒருவரும் இல்லை
இருப்பினும் என் பின்னே ஓடியோடி வந்தென்முன் நின்றான்
என் வாழ்வில் இனிமை இதயத்தில் மலர்ச்சி
கண்ணீரை முத்தமிட்ட கனவினால் ஏற்பட்டதே நெகிழ்ச்சி
கண்டேன் கடமைகள் கைகொட்டி சிரித்த காட்சி
நின்றேன் செய்வதறியாது ஒருகணம் நானே சாட்சி
காதலனுடன் மட்டும் வாழவே தோன்றியது கிளர்ச்சி
உணர்ந்தேன் வட்டத்தைவிட்டு வரமுடியாத அயர்ச்சி
செல்லமே என்று கொஞ்சிய நேரத்தில் வெட்கப்பட்டேன்
சோகமாய் வாடிய வேளையில் மனம் கசிந்தேன்
கைத்தட்டி மகிழ்ந்த பொழுது நானும் சிரித்தேன்
அவனை கண்டது ஒருகணமாயினும் நிறைந்தேன்
அவன் பெருமையறிந்து நானோ பெருமிதமடைந்தேன்
என்னிடம் அவன் பேசாத நேரத்திலெல்லாம் அழுதேன்
அன்றொரு நாள், என்னைவிட்டு பறந்து சென்றான்
நினைவுகளுடன் என்னை தவிக்கவிட்டு அகன்றான்
காணமுடியாத தொலைவில் சென்றே மறைந்தான்
என் கண்ணீரை விளக்குவாய் எனதருமை தென்றலே
உறவுகளுக்கு தெரியாமல் தேடுவாய் நண்பனே
பொறுமையாய் ரகசியமாய் சொல்லிவிடு இச்சேதியை
கண்டேன் அவன் கண்களை எங்கும் கண்டேன்
நினைத்தேன் பொய்பேசா உதடுகளை நினைத்தேன்
விழுந்தேன் அவனழகில் மயங்கியே விழுந்தேன்
கேட்டேன் புல்லாங்குழல் இனிமையைக் கேட்டேன்
இருந்தேன் உண்ணாமல் உறங்காமல் இருந்தேன்
மறந்தேன் நிலைக்கண்ணாடியில் காணவும் மறந்தேன்
என்னை விட்டுவிட்டு நண்பர்களுடன் கூத்தடித்தே
என்னை மறந்தாலும் என் நினைவுகளை ஏன் மறந்தான்
என்னை தனிமையில் தவிக்கவிடவே விரும்பியிருந்தாலும்
என்னை காதலில் ஆழ்த்திடவே ஏன் துணிந்தான்
என்னை குற்றவாளியே என்றே கூற முயன்றாலும்
என்னை வீணே காதலித்து ஏன் மறைந்தான்
சொல்வாய் ஒருமுறை அவனை நான் காணவேண்டுமென்று
சொல்வாய் அனலிடப்பட்ட புழுவாய் நான் துடிக்கிறேனென்று
சொல்வாய் புத்தி பேதலித்த நிலையில் நான் இருக்கிறேனென்று
சொல்வாய் அவனைத்தவிர எனக்கு வேறு சிந்தையில்லையென்று
சொல்வாய் அழுதவிழிகளுடன் அவன் நலனுக்காக பிரார்த்திக்கிறேனென்று
சொல்வாய் போராட்ட வாழ்வில் என்னையே மறந்தேனென்று
துக்கத்தில் இருக்கும் எனக்கு விடையளிக்க உலுக்கிடுவாய்
எப்பொழுதேனும் என்னை நினைக்கிறானா என்றே கண்டிடுவாய்
தென்றலே, பெண்ணாய் பிறந்ததே சாபமோ என்றே கேட்டிடுவாய்
என்னுயிர் பிரியும் நேரமும் வந்துவிட்டது என்றே உரைத்திடுவாய்
இல்லை, இல்லை, அவனுக்கு அவப்பெயராவதை விரும்பவில்லை என்றே சொல்லிடுவாய்
என் மனமும் இதயமும் அவனே என்பதை எடுத்தியம்பிடுவாய்
வலியுடனே நான் நாட்களை கடத்துகிறேன் என்றே செப்பிடுவாய்
தயங்காதே தென்றலே, நான் பொய் பேசவேண்டிய அவசியமில்லை
காதலே என் வாழ்வு என்பதில் இருவேறு கருத்தில்லை
என் செய்வேன் இனி என்றே தெரியவில்லை
ஆ! நான் வணங்கும் இறைவன் அவனே என்பது தெரியாமலில்லை
அதனால் என்ன, அவன் என் காதலன் என்பதில் சந்தேகமில்லை
காதல்வலி என்னை அவனிடமிருந்து பிரிப்பது சாத்தியமில்லை
காதலில் நானும் அவனும் ஒன்றே என்பதை உணராமலில்லை
இருப்பினும் அஞ்ஞானம் என் கண்களை மறைப்பது ஏன்
ஒருமுறை கண்டுபேசிடவே கண்ணீருடன் காத்திருப்பது ஏன்
கண்ணனே என்னுயிர் என்பது அவனுக்கு புரியாமலிருப்பது ஏன்
அவனிடமிருந்து பிரிக்கும் கடமைகளை இவ்வுடலில் புகுத்தியது ஏன்
அவனைப் புறக்கணிக்க தெரியாமல் நான் உருகுவது ஏன்
என் மொழியிலும் உயிரிலும் அவன்மட்டுமே தெரிவது ஏன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை
சூர்யா
Post a Comment