Sunday, February 18, 2007

என் தந்தை

[என் பாசமிகு தந்தை பல வருடங்களுக்கு முன் இவ்வுலகை விட்டு சென்று விட்டபடியால், அவர் வயதையொத்த யாரைக் கண்டாலும் ஓடியோடி பாசமுடன் உறவாடுவது ஏன்? அவர்களுள் என் உறவை காண முயல்கிறேனோ? எக்காலமும் பிரிக்க முடியாத பந்தமான என் தந்தையாய் சிவனும், அன்னையாய் சக்தியும் இருக்கையில் எதற்கு நானிங்கு தவிக்கிறேன்? என் தந்தையிடம் கேட்க விரும்புவது என்னென்ன?]


அன்றொரு நாள் கயிலையில்
அன்னையவள் என்னை
மடியில் இருத்தி தலைபின்ன
பொறுமையிழந்து நான் தவிப்பதை
என் தந்தை கண்டார்

யாரோ கூவும் குரல் கேட்டு
அம்மா திரும்பிய வேளையில்
நான் அங்கிருந்து சிட்டென ஓட
பாதி பின்னிய நிலையில்
அன்னை என்னை துரத்த
சிறுமியான என்னைக் காக்க
ஜடாதாரி பொன்மேனியார்
தந்தையோ ஓடோடி வந்து
என் கரம் பிடித்தார்

தலை கலைந்த நிலையில்
இன்று என் முகத்தை காண்கிறேன்
ஜோதியின் பொறியாய்
உயிரை இவ்வுடலில் புகுத்தி
பந்தங்களால் உணர்வுகளால் இயங்க
என்னை இவ்வுலகில் விட்டுவிட்ட
அந்த தந்தை அளித்த முகத்தை
மீண்டும் ஒருமுறை காண்கிறேன்

மகளாய் பாசமுடன் இருக்கிறேனா
மருமகளாய் பணிவுடன் நடக்கிறேனா
மனைவியாய் கடமையை செய்கிறேனா
அன்னையாய் அன்பை பொழிகிறேனா
காதலியாய் காலமும் கழிக்கிறேனா
தோழியாய் தோள் தருகிறேனா
இன்ன பிற உறவுகளை ஏற்கிறேனா
என்றே உள்முகம் அறியாத நிலையில்
வாழ்வது சதையும் ரத்தமும்
பொய்மையும் கலந்த இம்முகமோ

உள்ளும் புறமும் பலமுகங்களை அளித்த தந்தை
ஒரு மனதை அளித்த விந்தை புரியவில்லை
காலமும் பல உறவுகளை அளித்த தந்தை
ஓர் இதயத்தை இயங்கவைக்கும் நோக்கம் புரியவில்லை
உணர்வுகளோடு வாழக் கற்றுத் தந்த தந்தை
அதிலிருந்து விடுபடுவதை கற்றுத் தரவில்லை
கர்மங்கள் அண்டாத சிறுவயதில் விளையாடிய தந்தை
கர்மங்களுடன் வாழ்வது எப்படி என்று சொல்லித் தரவில்லை
பிறப்பையும் இறப்பையும் அளித்த தந்தை
அதன் தாக்கத்திலிருந்து விடுதலையளிக்கவில்லை

அவருடன் விளையாடிய பூரிப்பு
அவர் படைப்பில் நான் காணவில்லை
அவரிடம் அன்பை உணர்ந்த பாங்கு
அவர் படைப்பில் உணரவில்லை
அவரின் உண்மை நிலையை
அவர் படைப்பில் அறியவில்லை
எனவே என்னை சிறுமியாய் தன்னுடன் இருத்திக்கொள்ளட்டும்
இல்லை என் நிலையை உயர்த்தட்டும்

பொன்னிற மேனியாய்
இளமை ததும்பும் ஜடாதாரியாய்
முக்காலமும் உணர்ந்த முக்கண்ணனாய்
கங்கையின் செருக்கை அடக்கியவராய்
கருணாமூர்த்தியாய் சிவனாய்
தியான லிங்கமாய் பிரகாசிக்கும்
என் ஒப்புயர்வற்ற தந்தையைக் காண
விடைகளை தெரிந்துகொள்ள
உரிமையுடன் விண்ணப்பிக்க
செல்கிறேன் நடைபயணமாக
நீங்களும் வருகிறீர்களா என்னுடன்

No comments: