Sunday, February 18, 2007

கண்ணன், என் குழந்தை

[மதிய வேளையில் ஒரு நாள். தோழிகள் என் வீட்டுக் கதவைத் தட்ட
மெள்ள அடி மேல் அடி வைத்து கதவைத் திறக்கிறேன். கலகலவென சிரித்துக் கொண்டே உள்ளே நுழைபவர்களை அறைக்கு அழைத்து சென்று தணிவான குரலில் பேசுகிறேன். என் குழந்தையை இப்பொழுதுதான் கஷ்டப்பட்டு தூங்க வைத்திருக்கிறேன். இவர்கள் வந்து எழுப்பி விட்டால்..... இதோ நீங்களும் கேளுங்களேன்.)


அமைதியாய் வாருங்கள் எனதருமை தோழிகளே
என் செல்ல மகனை காணுங்கள் தோழிகளே

அழகாய் அவன் தூங்குவதைதான் கண்டீர்களே
இனி இங்கிருந்து அகன்றிடுவோம் ஏற்பீர்களே

வெண்ணெய் திருடன் இன்று என்னிடம் பிடிபட்டான்
அழுது வற்றிய கண்ணீருடன் என்னிடம் வந்தான்

மைவைத்த விழிகளால் என்னைக் கொண்டான்
என் மடிமீது தலைசாய்த்து கண்ணயர்ந்தான்

கேட்க விருப்பமோ அவன் தரும் தொல்லைகளை
என்னை ஆட்டுவிக்கும் கதைகள் கேளுங்கள் இதை

பாலெடுத்து சிந்தாமல் குடி என்றே நான் கூற
சரியென்று மயிலிறகால் பால்கொண்டு படம் வரைகிறான்

பொறுமையாய் அவன் கைபிடித்து குளிக்கவைக்க நான் செல்ல
என்னை நீரால் நனைத்து வேடிக்கை காட்டுகிறான்

அழகான கருமுகத்தில் மைவைத்து நான் அழகு பார்க்க
என் வெண்ணிற கன்னத்தை கருப்பாக்க அவன் அழுகிறான்

அருமையாய் ஆடையுடுத்தி அலங்காரம் நான் செய்ய
நொடிபொழுதில் அழுக்காக்கி அழகுடன் மிளிர்கிறான்

வானத்தையும் பறவைகளையும் நான் கற்றுத் தர
என் முகத்தை அன்புடன் பார்த்து கற்க மறுக்கிறான்

அவனுக்கு பிடித்த உணவை சமைக்க நான் முயல
பின்னிருந்து கட்டியணைத்து என்னை மறக்க வைக்கிறான்

அன்பாய் பாசமாய் அவனுக்கு நான் ஊட்ட அமர
அவனோ முழுங்காமல் என்னை நிலைகுலைய செய்கிறான்

ஒரு மூலையில் நின்று வேகமாக நான் உண்ண முயல
என்னை கண்டுபிடித்து அவனுடன் விளையாட வேண்டுகிறான்

அவனை உறங்க வைத்து நான் குளித்துவிட்டு வந்தாலோ
நெய்யைக் தன் மடிமேல் கொட்டி எனக்கு அதிர்ச்சியூட்டுகிறான்

வீட்டை துடைத்து துடைத்து துப்புறவாக நான் வைத்திருக்க
பிரளயம் வந்ததை போல் அமளி செய்து கலைத்துவிடுகிறான்

அவன் தடுக்கி விழாமல் தரையை துடைத்து வைத்தாலோ
என் பின்னிருந்து மாவு கொட்டி என்னை முட்டாளாக்குகிறான்

என் செல்லத்தை கைபிடித்து பிறர்மனை சென்றாலோ
அங்கும் வம்பு செய்து அனைவரிடமும் திட்டு வாங்குகிறான்

கற்றுக் கொள்ளும் ஆவலில் புத்தகத்தை கையில் எடுத்தாலோ
அணைத்து கொள்ளும்படி என்னை தொந்தரவு செய்கிறான்

அவனை அருகிலமர்த்தி இறைவனை வழிபட்டாலோ
சிரித்து சிரித்து எனக்கே கோபத்தை மூட்டுகிறான்

பூக்களை மாலையாய் தொடுத்து நான் இறைவனுக்கிட நினைக்க
தன் கழுத்தில் போட்டுக் கொண்டு என்னை அழ வைக்கிறான்

கண்ணை மூடி சிறிது நேரம் இசை கேட்க விரும்பினாலோ
தன் புல்லாங்குழலைக் கொண்டு என் காதில் சத்தமிடுகிறான்

என் கண்ணனை வரைய நானும் ஒவ்வொரு முறையும் முயல
அவற்றை கிழித்து தன் முகத்தை காட்டி வெறுப்பேற்றுகிறான்

அவனைப் பற்றி கவிதை எழுத நினைத்து அமர்ந்தாலோ
சத்தமின்றி என்னருகே வந்து அதில் கிறுக்கி வைக்கிறான்

ஏதாவது கற்றுக் கொள்ளடா என்று நான் ஆதங்கப்பட்டாலோ
என் புலம்பலை அலட்சியப்படுத்தி கடகடவென சிரிக்கிறான்

என் கண்மணி தூங்க வேண்டி நான் ஆராரோ பாடப்பாட
தனக்கு மட்டும் கருமை நிறம் ஏன் என்று கேட்டு அழுகிறான்

தொடராய் அவன் கேட்கும் கேள்விகளால் நான் தவிக்க
நான் அவனை கவனிப்பதில்லை என்றே குற்றம் சாட்டுகிறான்

உங்கள் குழந்தைகளும் இப்படித்தான் இருக்கிறார்களா என்ன
நான் மட்டும் தேனீயாய் ஒரு மகனை பெற்றெடுத்தேனா என்ன

இருப்பினும் அவனை திருத்தாமல் அந்த அழகில் மயங்கி விடுகிறேனே
என் குழந்தையின் மேல் உள்ள அன்பினால் குருடாகி விடுகிறேனே

அவனை அடிக்க மட்டும் என்னிடம் சொல்லி விடாதீர்கள்
அவனே என் உயிர் என்பதை மறந்து விடாதீர்கள்

அவனுடைய குறும்புகளால் நான் பலமுறை அழுதவண்ணம் இருக்க
என் கழுத்தைக் கட்டி கன்னத்தில் முத்தமிடும் செல்லம் அவன்

ஷ்ஷ்...... நம் குரலால் எழுந்திடுவான் சீக்கிரம் போய் விடுங்கள்
நானும் சிறிது தியானம் செய்கிறேன் அவனுக்கு நல்லாசி கிடைத்திடவே

என்ன உளறுகிறேன் நான்! அவனல்லவோ நான் வழிபடும் இறைவன்
இருந்தால் என்ன, என் அன்பால் அவனை பிடித்திருக்கிறேன் இறுக்கமாகவே

No comments: