Sunday, February 18, 2007

அன்புள்ள அன்னைக்கு...

[அன்னைக்கும் எனக்கும் உள்ள உறவென்ன? இதோ எழுதுகிறேன்......]

அம்மா அம்மா என்றே உயிர்கள் உருக
அன்னை உன்னை நான் நினைக்கிறேன்
ஆனந்த அமைதியுடன் என்னையும் ஏற்க
ஆதியே உன்னை நான் வேண்டுகிறேன்

வான்வெளியும் விண்மீனும் புடவையில் மிளிர
வாய்விட்டு நீ சிரிக்கும் அழகிலே கரைகிறேன்
வேதமாய் திகழும் உன் ஒளியினாலே
வேந்தனும் தலைவணங்கும் விந்தையைக் காண்கிறேன்

மாந்தர்தம் மடமையில் உன்னை மறந்தாலும்
மானிடராய் நீயே அவதரிப்பதைக் உணர்கிறேன்
மேகங்கள் உன்புகழ் மறைத்து நகர்ந்தாலும்
மேன்மையுற உன் வயிற்றிலே பிறக்கிறேன்

ஒவ்வொரு பிறவியிலும் உன்னை தாயாய்
ஒப்புயர்வற்ற ஞானத்தை அறிய முயல்கிறேன்
ஓதும் வேதங்களில் இருப்பதைவிட நீயோ
ஓம்காரத்தை அன்பினால் கரைப்பதை காண்கிறேன்

பட்டுப்பாவாடைக் கட்டிவிட்டு கொலுசிற்கும் உயிர்கொடுத்து
பதவிசாய் வளர்த்ததை என்னவென்று சொல்லுவேன்
பாந்தமாய் இருந்திடவே பலவற்றைக் கற்றுத்தந்த
பாங்கினைத்தான் என்னவென்று கூறி மகிழ்வேன்

தறிகெட்டு ஓடாமல் பெண்ணாய் திகழவே
தட்டிகேட்டு வடிவமைத்த பெருமையை யாரறிவர்
தாங்காமல் அழுதநேரங்களில் ஓடிவந்து என்னை
தாயாய் ஏந்திநின்ற பெருமையைத்தான் யாரறிவர்

குழந்தையாய் பாலுக்கு அழுதகாலம் உண்டிங்கு
குழவிதனின் பசியை போக்கிவிட்ட உமையவளே
கூவியழைத்த நேரங்களில் தயங்காமல் வந்திங்கு
கூத்தைவிட்டு கயிலைவிட்டு வளர்த்த சக்தியவளே

அன்பிலே இன்பத்தையும் துன்பத்தையும் உணரவைத்து
அன்போடு இருந்திடுவாய் என்றே உரைத்திட்டாய்
அயராமல் நானும் அதைஏற்றே வாழ்ந்திருக்க
அன்னை ஏன் என்னைவிட்டு சென்றுவிட்டாய்

காலமதின் வேகமான சுழற்சியின் காரணமாய்
காலன் வந்தெனை அழைத்திடுவான் அன்னையே
கேள்வியாய் நானிருக்க இரக்கமுடன் தேடிவந்து
கேடுகெட்ட என்னையும் ஏற்பாய் அன்னையே

உவகையுடன் உன்வரவை எதிர்பார்த்து நானிருக்க
உரிமையுடன் ஓடோடி வருவாயோ அன்னையே
ஊட்டிவிட்ட கையினாலே உறக்கம்வர தட்டிகொடுத்து
ஊசலாடும் என்னுயிரையும் ஏற்பாயோ அன்னையே

No comments: