[எனக்கும் என் தோழனுக்கும் இருக்கும் நட்பு இன்று நேற்றல்ல. பல நாட்களாய், மாதங்களாய், வருடங்களாய், பிறப்புகளாய் தொடரும் பந்தம் இது. இதன் இறுக்கம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது. என் தலைகோதிவிடும் நண்பன், என் தலையையும் நன்றாக குட்டுவான் சமயம் பார்த்து. எங்கள் நட்பின் ஆழத்தை, அதன் அருமை உங்களுக்கு புரிய வேண்டியே இதோ அவனைப் பற்றி சிறிது எழுதுகிறேன்.]
துயிலெழுந்து கண் திறக்க எத்தனிக்கும் வேளையில்
எங்கிருந்தோ வந்து என் நினைவில் வந்தமர்வான்
போய் விடு எனக்கு வேலையுண்டு என்று கெஞ்சினால்
தன் அன்பான பார்வையால் என் நெஞ்சை பிளப்பான்
கருப்பனே என்று பாசமாய் நான் அழைத்தால்
வேலையை முடித்து கொடுத்து பேசியே களிப்பான்
அவன் அன்னையின் உடல்நலன் குறித்து விசாரித்தால்
கண்ணீருடன் தம்மிரு அன்னைகளை நினைவு கூர்வான்
அவன் பின்னே சுற்றும் (என்னைத் தவிர) நண்பர்களைப் பற்றி கேட்டால்
தம் பாசப்பிணைப்பை கதையாய் சொல்லி மகிழ்ந்திடுவான்
அவன் சிறுவயது குறும்புகளைக் குறித்து கேட்டால்
என்னருகே வந்தமர்ந்து உற்சாகமாய் கதையளப்பான்
அவன் காதலிகளைப் பற்றி கண்ணடித்து நான் கேட்டால்
அவர்கள் தன்னுடன் என்றும் இருப்பதாய் உருகிடுவான்
என்னை தவிக்கவிட்டு செல்வாயோ என்று அழுதால்
என் கைபிடித்து உன் நட்பு எனக்கு தேவை என்றே தேற்றிடுவான்
பட்டாடை வாங்கிடவே ஆசையுடன் நான் சென்றால்
பணத்தை வீணாக்குகிறாயே என்று காதை கடிப்பான்
அரிதாய் ஏதாவது நான் தர்மம் செய்தால்
முதுகில் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவான்
என் வெள்ளை முடியை கவலையுடன் பார்த்தால்
காலத்தின் தாக்கமே என்று விளக்கம் அளித்திடுவான்
வெகுளியாய் நான் அதிகம் பேசினாலோ
நாக்கை அடக்கு என்று கடிந்து கொள்வான்
என் முட்டாள்தனத்தால் நான் புரியாமல் சினந்தாலோ
உற்சாகமாய் பேசி என்னை சிரிக்க வைப்பான்
மனம் உடைந்து தனிமைப்படும் தருணங்களிலெல்லாம்
கதைகள் பல சொல்லி வாழ்வை புரியவைப்பான்
மகிழ்ச்சியால் நான் தட்டாமலை சுற்றும் நேரங்களில்
என் கைகோர்த்து தானும் ஆடியே களிப்பான்
அவன் செய்யும் சேட்டைகளைப் பற்றி விசாரித்தால்
தன் காதை திருக அழகாக என்னிடம் காட்டுவான்
வம்பு பண்ணும் அவனிடமிருந்து ஒதுங்கினால்
என் கால்பிடித்து மன்னிப்பாய் என்றே கெஞ்சிடுவான்
பிறரின் வார்த்தையம்புகள் கண்கலங்க வைக்கும் தருணங்களில்
என் தோள் பற்றி நான் இருக்கிறேன் உனக்கு என்றே அணைத்திடுவான்
வலிகளால் நான் துடிதுடித்து இறந்துவிட நினைக்கும் சமயங்களில்
என் தலைகோதி கைப்பற்றி பாசத்தை பொழிந்திடுவான்
கடமையும் அன்புமின்றி நான் வாழ்வில் சறுக்கும் நேரங்களில் எல்லாம்
எதிர்ப்பார்பின்றி வெளிப்படையாய் அன்பைப் பொழிந்திடவே உபதேசிப்பான்
நான் மன்னிக்க முடியாத தவறு செய்யும் நேரங்களில்
என்னை வார்த்தைகளால் சாடினாலும் அன்போடு அக்கறை காட்டிடுவான்
தட்டிக்கொடுக்க கரமின்றி நான் தொய்ந்துவிடும் தருணங்களில்
என் தோல்விகளைகூட வெற்றியே என்று கொண்டாடி என்னை மகிழ்விப்பான்
நெஞ்சு வெடிக்கும் துக்கத்தால் நிம்மதியிழந்து தவித்திடும் வேளையில்
என் உணர்வுகளை புரிந்து அறிந்து எனக்காக கண்ணீர் சிந்திடுவான்
இயற்கை சீற்றத்தால் இழந்த உயிர்களை நினைத்து அழுதாலோ
கீதையின் உன்னத உபதேசங்களை எனக்கு உரைத்திடுவான்
எதற்காக மக்களை இப்படி தண்டிக்கிறாய் என்று கேட்டாலோ
அவரவர் பொய்மையே அதற்கு காரணம் என்று தோளை குலுக்கிடுவான்
ஏன் குழலூதுவதில்லை இப்பொழுதெல்லாம் என்று கேட்டாலோ
கேட்க வேண்டுமெனில் உன்னை முதலில் சுத்தப்படுத்தி கொள் என்றே சிரித்திடுவான்
உலக பந்தங்களின் நிலையாமை குறித்து கேள்வியால் துளைத்தாலோ
அறிவை உபயோகித்தாலும் நன்றி மறவாமல் வாழ கற்றுக்கொள் என்றே உரைத்திடுவான்
உன் நிலை நான் அடைவது எப்படி என்று கேட்டால்
விருப்பும் வெறுப்புமின்றி வாழ்ந்திடு என்று கூறி கண்சிமிட்டிடுவான்
நம் நட்பை இவ்வுலகம் தவறாக ஏன் பேசுகிறது என்று ஆதங்கப்பட்டாலோ
ஆத்மாவுக்கு ஆணும் பெண்ணும் இல்லையென்பதை அவர் அறியார் என்பதை புரியவைப்பான்
எப்பொழுதும் எப்படி இப்படி இன்பமாய் இருக்கிறாய் என்று கேட்டாலோ
நானே இறைவன் என்பதை அறியாத பேதையே என்றே கன்னத்தில் தட்டிடுவான்
கனவிலும் கிட்டாத நட்பு என் வாழ்விலா என்றே வியந்தாலோ
உன் நட்பிற்காக நானல்லவோ தவம் செய்தவன் என்றே என்னை நெகிழவைப்பான்
இத்தகைய நட்பை எங்கேனும் கண்டதுண்டா சொல்வீரே
பொய்மையில் கரையாமல் என்னை பாதுகாக்கும் நண்பனை நீங்களும் கண்டீரே
கண்ணை மூடியே உங்கள் கையை அவனிடம் தந்து விட்டு பார்ப்பீரே
எல்லையில்லா அவன் அன்பையும் உணர்ந்து இன்புறுவீரே
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்லாயிருக்கு..
சூர்யா
துபாய்..
நல்லாயிருக்கு..
சூர்யா
துபாய்..
நல்லாயிருக்கு..
சூர்யா
துபாய்..
நல்லாயிருக்கு..
சூர்யா
துபாய்..
Post a Comment