Saturday, November 25, 2006

என் கண்ணனை கண்டீரோ

காலையும் மாலையும் வானத்தை சிவக்க செய்யும் ஆதித்யனின் உறவிலே
பரந்து விரிந்த கடலரசனும் மெய் மறந்து நிற்கின்ற வேளையிலே
கடலும் தன் அங்கமான நீரை சிறிது சிறிதாக தொலைக்கும் தருணத்திலே
அவை மேலெழும்பி நடு வானத்தில் கார்மேகமாய் மாறிவிட்ட நேரத்திலே
என் கண்ணனின் நிறத்தை ஒத்ததனால் ஏற்பட்ட பெருமையினாலே
என் கண்கள் சிரித்தன வானத்தில் மிதக்கும் அந்த மேகத்தின் செருக்கை கண்டதாலே

காற்றின் தாலாட்டிலே மேகமும் இன்னிசையோடு கானகத்தே நகர
களைத்த என் கண்களுக்கு விருந்தாக மயிலொன்றும் அங்கு வர
மழையில் நனைய போகும் மகிழ்ச்சியிலே ஆண் மயிலும் தோகை விரித்தாட
கண் கொண்ட மட்டும் கண்டு விட்டு நானும் மெய் மறந்து அதன் அழகில் லயிக்க
என் கண்ணனின் சிகையில் அமரும் பெருமையை நினைத்து மயிலும் செருக்கிலே ஆட
தவறி விழுந்த இறகொன்றை என் கைகளும் எடுத்துக் கொண்டன என் அவனுக்காக

என் பொக்கிஷத்தை கையிலேந்தி மேலும் என் கால்கள் நடக்க
கூர்மையான என் கண்களில் ஒர் ஓவியனின் தூரிகையும் பட
கண்ணிமைக்க மறந்து அவன் வண்ணக் குழைவிலே வளரும் ஓவியத்தைக் இரசிக்க
மஞ்சள் உடையணிந்த அழகு கொஞ்சும் முகம் என்னை வாவென்று அழைக்க
கலைஞனின் கால்களில் வெட்கமின்றி விழுந்து அந்த ஓவியத்தையும் நான் பெற
இடுப்பில் செருகிய மயிலிறகுடன் இதையும கட்டியணைத்து நடந்தேன் மெதுவாக

கல்லும் முள்ளும் இறகும் ஓவியமும் என் பயணத்தை கடினமாக்க
ஓய்வு வேண்டிய கால்களும் ஒரு சிறிய வீட்டின் முன் நிற்க
சிற்பியொருவன் உளியால் சிறு உருவத்தை செதுக்கும் அழகை கண்டு வியக்க
பசி மறந்து தரையில் அமர்ந்து அந்த சிற்பத்தின் முழு அழகை காண விழைய
மதி மயக்கும் புன்னகையுடன் நிற்கும் என் காதலனை அங்கும் கண்டு அதிர
சிற்பியே வலிய வந்து என் கைகளில் அவனை திணித்தான் அன்பாக

சிற்பமும் ஓவியமும் மாறி மாறி என் உணர்வுகளை அலைகழிக்க
என் செய்வேன் என்று தெரியாமல் நானும் ஒரு மூங்கில் காட்டிற்குள் நுழைய
ஓங்கி வளர்ந்த மூங்கிலை கண்டு நானும் வியப்பில் ஆழ்ந்து நிற்க
இடைச்சிறுவன் ஒருவன் சிரித்துக் கொண்டே ஒரு மூங்கில் குழாயை என் கையில் திணிக்க
என் இனிமையான இசைக்கு அகத் தூய்மையேக் காரணம் என்று புல்லாங்குழலும் தத்துவம் பேச
அறியாமையின் விளிம்பில் இருக்கும் நான் ஒன்றும் புரியாமல் நடந்தேன் அவன் நினைவாக

புல்லாங்குழலும் என் உடைமைகளுடன் சேர்ந்து சுமையைக் கூட்ட
போதாதென்று காட்டுப் பூக்களை ஆசையுடன் நான் பறித்து மாலையாக்க
எப்படி எடுத்து செல்வது இந்த மாலையை என்று விழித்து நானும் நிற்க
மூளையின் ஓரத்தில் பொறித் தட்டி அந்த மாலையை நானே சூட
அடுத்து என்ன என்று புரியாமல் கண்களும் கால்களும் கெஞ்சிக் கேட்க
இனி ஒரு அடி வைக்க இயலாத நிலையில் தடுமாறினேன் களைப்பாக

இந்த நிலையிலே பசிக் காதை அடைத்தது
தாகத்திலே நாவும் வறண்டது
தூக்கமின்மையால் கண்கள் எரிந்தன
முட்கள் பதம் பார்த்ததால் கால்களில் இரத்தம் வழிந்தது
என் மென்மையான கரங்களும் சிவந்தன
கைகள் தூக்கி வந்த களைப்பால் வலித்தன
தலை கனத்தன தோள்கள் கெஞ்சின
முதுகோ படுக்க தூண்டியது
கண்ணீர் முத்துக்கள் தெறித்தன
துக்கம் தொண்டையை அடைத்தது

அனைத்தும் அறிந்தவன் பண்பிலே உயர்ந்தவன்
அழகிலே நிகரற்றவன் வார்த்தையிலே வல்லவன்
பிறர் துன்பம் துடைக்க வருபவன் என்றார்களே
அனைவரும் பொய்யர்களோ
அவன் நெஞ்சம் கல்லால் ஆனதோ
என் அன்பு அவன் கண்களில் விழவில்லை போலும்
என்று பல மணி நேரம் அரற்றிய வேளையிலே

நறுமணம் கமழ, காற்றிலே கீதம் இசைக்க
ஜல் ஜல் என்று சலங்கை ஒலி இசையை கூட்ட
சுருண்ட கூந்தல் தென்றலில் இனிதே அசைந்தாட
உடல் முழுவதும் ஆபரணம் ஜொலிக்க
பீதாம்பரம் அணிந்த கருமேனியாய் அழகில் மிளிர
காந்த கண்களில் அன்பைத் தேக்கி
சிவந்த உதட்டில் சிரிப்பை நிறுத்தி
அருகில் வந்து கண்ணனே என் முன் நிற்க

நானும் என் கழுத்திலிருந்த மாலையை அவனுக்கு சூட்ட
பிறகு என் புல்லாங்குழலும் மயிலிறகும் அவன் உடலில் ஏற
அறிவும் அழகும் இல்லாத என்னையும் அவன் ஏற்க
என் துன்பம் அனைத்தும் சிட்டென பறக்க
மகிழ்ச்சியான அந்த நேரத்தில் ஒரு பாறையில் கைக் கோர்த்து அமர்ந்தோம்

என் கண்ணீரைத் துடைத்தான்
கைகளை ஆதரவாக தடவினான்
கால்களில் வழியும் இரத்தத்தை தன் உடையால் துடைத்தான்
ஓவியத்தையும் சிற்பத்தையும் இரசித்தான்
பழங்களையும் உண்ண வைத்தான்
கைகளால் நீரை நிரப்பி என்னை குடிக்கவும் வைத்தான்
அழுக்கான என்னை கண் கொட்டாமல் பார்த்தான்
பிறகு முத்துப்பல் தெரிய என்னைப் பார்த்து சிரித்தான்
பேதை பெண்ணே! நான் யாரென்று தெரியவில்லையா இன்னும்
என்றும் எள்ளி நகையாடினான்

ஒரு கணம் என் மாயையைதான் அகற்றினானோ
இல்லை என் சிந்தைதான் கலங்கிவிட்டதோ
புரியாமல் என் கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன்
அங்கே……..அங்கே…….
அவனே கார்மேகமாய் மயிலாய் ஓவியனாய்
சிற்பியாய் இடைச்சிறுவனாய் புல்லாங்குழலாய்
மலர்களாய் நீராய் மரங்களாய் நானாய் அவனாய்
மாறி மாறி காட்சியளித்தான்

புரியாமல் விழித்த என்னைப் பார்த்து விளித்தான்
அறியாமையில் மூழ்கி தவிக்கும் அன்புப் பெண்ணே!
என்னை தோழனாக ஏற்றுக் கொண்டுள்ள சகியே!
காதலில் தினமும் உருகி உன்னையே மறக்கும் என் காதலியே!
என் உருவத்தில் மயங்கி உண்மையை மறந்த பேதையே!
நானும் நீயும் யாரென்று அறிய முயற்சி செய்

என் அழகும் வெளித் தோற்றமும் உன் கற்பனையே
உன் ஐம்புலன்களும் இவ்வுலகமும் என் திருவிளையாட்டே
உன் உடலும் உள்ளமும் வெறும் மாயையே
உன் சொந்தமும் பந்தமும் புறக் கண்களுக்கே
உன் அறிவும் அகந்தையும் நான் கொடுத்த பொய்மையே
என் ஆராதனையும் அவதாரமும் உன் சாதனைக்கே
இதை உணர்ந்து உடனே விழித்துக் கொள்
நானும் நீயும் அன்பைத் தவிர வேறி;ல்லை
ஆன்மாவான உனக்கு உருவம் என்று ஒன்றில்லை
இதை புரிந்துக் கொண்டு பிறகு என்னை அழைப்பாய்
என்று கூறி விட்டு என் கண்ணன் மறைந்தே விட்டான்

நான் எங்கு சென்று அவனைத் தேடுவேன்
அவன் கூறிய உபதேசம் என் காதில் விழவில்லையே
அவனையல்லவோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்
பல பெண்களை பித்தனாக்கிய எத்தனல்லவோ அவன்
இருப்பினும் என் மனம் அவனுக்காகவே ஏங்குகிறதே
என்ன கல்நெஞ்சம் அவனுக்கு என்னை தவிக்க விட்டு செல்ல

பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்
அழகு வேண்டேன் அறிவும் வேண்டேன்
சுற்றம் வேண்டேன் சுகம் வேண்டேன்
பேச்சும் வேண்டேன் மூச்சும் வேண்டேன்
தத்துவம் வேண்டேன் உண்மையும் வேண்டேன்
உயிரும் வேண்டேன் ஒன்றும் வேண்டேன்

ஆயிரத்தில் ஒருத்தியாக நான் இருந்தாலும்
என் மனம் அவனைத் தவிர வேறொன்றும் விரும்பவில்லை
எனக்கு அவனைத் தவிர வேறெதிலும் நாட்டமில்லை
ஒரு முறை என் அன்பிற்கு அடிபணிந்தவன்
வேறு பெண்களின் அழைப்பில் பறந்து சென்றானோ
இல்லை என்னை மறந்து தான் விட்டானோ
அவன் தத்துவமும் புரியவில்லை
அவனையும் புரிந்துக் கொள்ள முடியவில்லையே

என் கண்ணனை கண்டீரோ யாரேனும்
என் மாயக் கண்ணனைத்தான் கண்டீரோ

என் கண்ணனை தான் கண்டீரோ எங்கேனும்
என் இதயக் கண்ணனைத்தான் கண்டீரோ

No comments: