கண்கவரும் மாலைப் பொழுதின் நேரத்திலே
கடற்கரையில் நானும் தலைசாய்த்த வேளையிலே
கண்டேன் கடலரசனின் ஓயாத விளையாட்டிலே
அன்பின் வெளிபாடாய் கணக்கற்ற அலைகளிலே
இரவும் பகலும் அவளான கடற்கரையை
பகிரங்கமாக அவன் காதலிக்கும் கூத்தை
வியந்தேன் இயற்கையின் விந்தையைக் கண்டே
சிரித்தேன் நிதம்தவறாத நாடகத்தைக் கண்டே
மறைந்தன என்னைச் சுற்றிய குரல்களும்
விரைந்தன என்மேல் விழுந்த நிழல்களும்
நிறைந்தன எங்கும் கருமையான இருளும்
நிலைத்தன வான்நோக்கிய என் விழிகளும்
விண்மீன்கள் என்னைக்கண்டு கண் சிமிட்டினவே
அதன் அன்பில் என்நெஞ்சம் கரைந்தனவே
கருவிழிகள் ஒவ்வொன்றாய் காண விழைந்தனவே
வானத்து வரைபடத்தைக் கண்டு மலைத்தனவே
நட்சத்திர அளவை மனம் உணர்த்த
அதன் சூடும் அறிவைத் தாக்க
நெஞ்சம் என் கண்ணை மட்டும் ஏற்க
இவையின்றி எப்படியிருக்கும் என்றே நினைக்க
கவிஞர்களின் கவிதைகள் தடுமாறி தவிக்குமோ
வானியல் வெறும் கட்டுக்கதையாகி இருக்குமோ
வானம் அழகின்றிதான் இருண்டு போகுமோ
சூரியனின்றி இவ்வுலகமும் அழிந்து இருக்குமோ
நட்சத்திரத்தின் உயர் நிலையை உணர்ந்தேன்
ஒவ்வொன்றும் தேவையென்பதை அறிந்தேன்
ஒற்றுமையின் அழகையும் சிறிதே கற்றேன்
கண்ணும் அறிவும் ஒருசேர எழுந்தேன்
நான் கற்றப் பாடத்தைக் கேட்பாய்
என் மனம் கொண்டே அதை உணர்வாய்
நீயொரு நட்சத்திரம் என்றே அறிவாய்
நானும் நட்சத்திரமே என்பதை ஏற்பாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment