
கோகுலத்து நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து
பல மனைகளில் அழையாமல் நுழைந்து
குறும்பு செய்தே களைத்துப் போய்
என் கழுத்தைகட்டி உணவு உண்டு
அந்தி பொழுதின் குளிர்ந்த கவர்ச்சியில்
என் மடியில் படுத்து சிரித்துக்கொண்டே
மெல்லிய குரலில் வருடிச் செல்லும்
என் ஆராரோ இசையில் நீயும் மயங்கியே
விளையாடி களைத்த உடல் இறைஞ்ச
உன் கேசத்தை இதமாய் கோதிவிடும்
என் கையை பிடித்த உன் பிஞ்சுக்கரங்கள்
ஆதரவு கிடைத்த மகிழ்ச்சியில் சிறிது
கண்மூடி உவகையுடன் உலகம் மறந்து
தூங்கும் வேளையில் என் கண்கள்
உன் கருநீல அழகுமுகம் கண்டு
லயித்துப் போன பெருமை நெஞ்சுடன்
கண்திருஷ்டி கழிக்க இறைவனை வேண்டி
உன் குறும்பில் நானும் பொறுமை இழந்து
உன்னைத் திட்டிய கணங்களை நினைத்தே
உன் பாதம் எடுத்து என் கண்ணில் ஒற்றி
அதன் மென்மையில் கரைந்து கண்ணீர்விட
வெண்ணெய் திருடும் கயவனின் தாயே
என்றே அனைவரும் என்னை இகழ்ந்தாலும்
ஒருகணமும் உன்னைவிட்டு பிரிய மனமின்றி
அணைத்து அரவணைத்து அன்புடன் காப்பாற்றவே
துடிப்பவள் இந்த பேதை என்பதை
புரிந்து கொள்வாயோ என் செல்ல மகனே
No comments:
Post a Comment