தட்தட்டென தரையில் நர்த்தனமாடும் மழைநீரின் ஆட்டத்தில்
வெகுளியாய் துள்ளியோடும் புள்ளிமானின் மிரட்சியில்
கவலையின்றி உயரப் பறக்கும் பறவையின் சுதந்திரத்தில்
அதிகாலை சோம்பலை தட்டி எழுப்பும் சூரிய கிரணங்களில்
ஓய்வின்றி புரியாமல் உழைக்கும் கடலலையின் ஓங்கிய ஓசையில்
சிரிக்கும் பூக்களை முத்தமிட துடிக்கும் தேனீயின் ரீங்காரத்தில்
கண்கவர் வண்ணங்களில் பறக்கும் பட்டாம்பூச்சியின் படபடப்பில்
வெறுமையை அருமையாய் காட்டி கண்கட்டும் நீலவானில்
செருக்கோடு வானத்தில் மிதக்கும் நீருண்ட கருமேகங்களில்
உடல் நடுங்க மனம் கலங்க கம்பீரமாய் முழங்கும் இடியோசையில்
மௌனமாய் தியானம் செய்யும் மலையுச்சியின் இரகசியத்தில்
பெண்மையின் நாணத்துடன் கூடிய நதிநீரின் நளின ஓட்டத்தில்
வெள்ளிக்கம்பிகளாய் தரையில் விழும் அருவியின் அவசரத்தில்
அழகான வெண்ணிலவை பிரதிபலிக்கும் ஏரியின் அமைதியில்
உரிமையோடு உறவாடும் தென்றலின் பட்டுப் போன்ற மென்மையில்
மனதை உருக்கும் அழிவை செவ்வனே செய்யும் புயலின் சீற்றத்தில்
பூமியில் நடந்த எண்ணற்ற பாதைகளின் காலடிச்சுவடுகளில்
உறைந்து படர்ந்து நிற்கும் பனிமலையின் வெண்மையில்
பறவைகளின் கானத்தில் திளைக்கும் கானகத்து மரங்களின் பசுமையில்
கடினவாழ்வின் சின்னமாம் வறண்ட பாலைவனத்தின் மண்விரிப்பில்
காண்போரை மயக்கும் வானவில்லின் வண்ணகுழைவினில்
உயிரை வருடிச் செல்லும் கவிஞனின் வார்த்தை ஜாலங்களில்
காலம் முழுதும் நெஞ்சில் வலியைத் தரும் காதலில்
கள்ளமறியா மனங்கொண்டு உயிரையும் தரும் அன்பில்
அனைத்திலும் அனைத்திலும் உன்னையே காண்கிறேன்
உன் காலடியில் வீழ்ந்த கணங்களிலும் உன்னையே காண்கிறேன்
உன் பாராமுகத்திலும் உன்னையே நினைத்து வாழ்கிறேன்
இறப்பை எதிர்நோக்கிய என் உயிரிலும் உன்னையே காண்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Dear Padmaja
It requires assistance even to understand the meaning of certain words mentioned in this poem.Truly the art of a REAL POET!I have no words to appreciate the beauty of every line of this poem.Marvellous job! Keep it up Padmaja!
Post a Comment