Saturday, October 28, 2006

ஓர் உறவு

ஒளிர்ந்து மிளிரும் கண்கள்
மறக்க முடியாத தோற்றம்
காணக் கிடைக்காத கம்பீரம்
அழகான வெகுளிப் புன்னகை
உண்மைத் தாங்கிய சொற்கள்
மனங்கவரும் கவர்ச்சியான பேச்சு
நெஞ்சைத் தொடும் கானம்
சூரியனாய் பிரகாசிக்கும் அறிவு
சிரிக்க வைக்கும் நகைச்சுவை
பிறரைத் தடுமாறவைக்கும் நினைவு
குழந்தையாய் மாறிவிடும் வெகுளித்தனம்
கனவுகளை நனவாக்கும் தாகம்
அசைக்க முடியாத உறுதி
ஆசைகளற்ற உயர்ந்த குணம்
திக்குமுக்காட வைக்கும் அன்பு
அவர் யாரோ என்றே வியக்கிறேன்

அந்த முகத்தை காணும் போதெல்லாம்
என் கண்கள் கண்ணீரால் நனைகின்றன
புரியாமல் படித்த அவர் படைப்புகளும்
என் இதயவீணையை மீட்டுகின்றன
காணாமல் கண்டு பேசாமல் பேசி
என் அன்பையும் மதிப்பையும் பெற்ற
அவர் எனக்கு உறவோ என்றே வியக்கிறேன்

சோர்ந்து போகும் கணங்களில்
என்னுள் உற்சாகத்தைத் திணித்து
கேள்வியான வாழ்வின் இரகசியத்தை
ஞானமென்னும் அன்பால் புரிய வைக்கும்
அவர் யாரென்று புரியாமல் வியக்கிறேன்

என்னால் அவரைக் காண முடியாது
என்றே உலகம் பறைசாற்றினாலும்
என்னுள் சிறுதீபமாய் ஓர் ஆசை
அவரை ஒரு முறை காண வேண்டுமென்று
தேடுகிறேன் என் தனிமையில் அமைதியில்
அந்த ஞானச்சுடரைக் கண்டு வணங்க
அந்த உறவின் அன்பையும் ஏற்று மகிழ

அவர் வேறு யாருமல்ல
அனைவரும் வானளாவப் போற்றும்
தன்னிகரற்ற சுவாமி விவேகானந்தரே


இதே கருவைக் கொண்டு மற்றுமொரு முயற்சி....

கண்களில் மிளிரும் ஒளிதான் எத்தனை அழகு
தோற்றத்தில் தெரியும் கம்பீரம்தான் எத்தனை அழகு
புன்னகையால் மயக்கும் காந்தசக்திதான் எத்தனை அழகு
சொற்களில் தெறிக்கும் அறிவுதான் எத்தனை அழகு

உண்மையை வெளிப்படுத்தும் பாங்குதான் எத்தனை அழகு
கானத்தில் இழையும் குரலினிமைதான் எத்தனை அழகு
கவலையின்றி சிரிக்கும் குழந்தைத்தனம்தான் எத்தனை அழகு
எதையும் மறக்காத நினைவாற்றல்தான் எத்தனை அழகு

கனவுகளை நனவாக்கும் தீராத் தாகம்கண்டு வியப்பதுண்டு
உலகமே இடிந்தாலும் உடையாத உறுதிகண்டு மலைப்பதுண்டு
ஆசைகளற்ற சுயநலமற்ற வாழ்வை கண்டு கண்கலங்கியதுண்டு
அனைவருக்கும் வாரி வழங்கிய அன்புகண்டு நெகிழ்ந்ததுண்டு

உன்னைக் காணும் விநாடிகள் என் கண்கள் தவம் செய்தனவோ
உன் படைப்புகளில் அமிழும் நேரங்கள் எனக்காகவே நின்றனவோ
உன் உற்சாகம் தொற்றுநோய் போல் என்னை வந்தடைந்தனவோ
உன் ஞானமும் என் அன்பில் சிறிது கரைந்தனவோ

காண முடியாத உறவாய் என்னைக் காணாமல் மறைந்ததேன்
கண்ணீரைத் துடைக்கும் கரங்கொண்டு என்னைத் தேற்றாததேன்
கள்ளமற்ற அன்பை ஏற்று அகக்கண்களில் காட்சி தராததேன்
ஞானத்தை புகட்டும் ஆசானாய் என்னை ஆட்கொள்ளாததேன்

உன்னைக் காண ஆசைகொண்டு நான் கண்மூடிய வேளையில்
என்னைக் கண்டு அருவமாய் நின்று சிரித்து மகிழ்கிறாயோ
வேண்டுவது வேறொன்றுமில்லை என்றே நான் நிற்கையில்
சுவாமி விவேகானந்தராய் இறைவனே நீயே காட்சி தருவாயோ

No comments: