காதல், காட்டம்
கனிவு, கசப்பு
களிப்பு, கண்ணீர்
கனவு, கவலை
எப்படி உன்னால் மட்டும்
உணர்வுகளின் தாக்கங்களை
பிரதிபலிக்க முடிகிறது?
வானத்தில் மின்னும் தாரகைகளும்
வளைந்து நிற்கும் வானவில்லும்
வரைந்து மறையும் மேகமும்
நீ இல்லையெனில்
இருந்துதான் என்ன பயன்?
இரவின் இருளில்
நினைவுகளின் அழுத்தத்தில்
தனிமையின் தவிப்பில்
உடலும் அமைதியான வேளையில்
மூடிய உன் நிலையிலும்
கண்ணீரை விட்டு
எப்படி இயங்க முடிகிறது?
இதயம் சுக்குநூறாக
உடைந்து நொறுங்கும் போது
நீ கண்ணீர் ரத்தத்தை விடுகிறாயே
உனக்கும் இதயத்துக்கும்
அப்படி என்னதான் சம்பந்தம்?
இடது வலது என்று
கைகள் தனித்தனியே
இயங்கும் போது
நீ மட்டும் வெட்கமின்றி
எப்பொழுதும்
உன் ஜோடியுடன்
ஏன் இப்படி அலைகிறாய்?
ஜன்னல்களாக இருந்து
பலரின் இதயங்களை இணைக்கும் நீ
அழகை ஆராதிக்கும் நீ
உன்னையே உன்னால்
ரசிக்க முடிவதில்லையே
ஏன் மறந்தாய் இந்த உண்மையை?
இமைகள் தூங்கிவிட்டதனால்
சிறு துரும்பு உன்னை தாக்க
கண்ணீரோடு அலைகிறாயே
சோகத்தின் உச்சத்தில்
அதிர்ச்சியின் அதிரடியில்
சில நேரங்களில்
ஏன் கண்ணீரற்று உறைகிறாய்?
அழகு உன்னால் அழகு பெற
அறிவு உன்னால் வளர்ச்சி அடைய
சுயநலமிக்க இவ்வுலகில்
நீ மட்டும் ஏனோ
பலனின்றி உழைக்கிறாயே
இது தெரியுமா உனக்கு?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Good Stuff!!
Post a Comment