Monday, September 25, 2006

இருபது ஆண்டுகளுக்கு பின்

முதுமையின் பெருமையை தாங்கிதான் நிற்பேனா
வெள்ளை முடிசூடி என் அழகைதான் இரசிப்பேனா

முகங்கள் பல கண்டு துள்ளிக் குதித்து மகிழ்வேனா
முகமே தேவையில்லை என்று மறைந்து தான் வாழ்வேனா

நோய்களின் பாசத்திலே துவண்டு போய் விடுவேனா
உடலின் வலிமையிலே தேனீ போல் வாழ்வேனா

கண்களிலே ஒளியிழந்து இருளைதான் மணப்பேனா
கண்ணல்லவோ நீ என அகம் மகிழ வைப்பேனா

கால்களிலே வலுவிழந்து தடியை தான் பிடிப்பேனா
நிமிர்ந்த நடை போட்டு உலகையே வலம் வருவேனா

சொற்களின் ஜாலங்களில் மயங்கியேதான் இருப்பேனா
வார்த்தைகளின் தாலாட்டில் பலரையும் உடன் அழைப்பேனா

கலைகளை கற்காததால் மனம் நொந்து போவேனா
வாழ்வின் கலையிலே தலை சிறந்து விளங்குவேனா

தாயின் இறுதி மூச்சு வரை சேவையைதான் செய்வேனா
பெற்றவளின் குணத்தை நான் சிறிதளவாவது கற்பேனா

மைந்தனின் வாழ்விலே அவன் நலனையேதான் நாடுவேனா
சுதந்தரமாய் படிக்க வைத்து பறக்க விட்டு மகிழ்வேனா

கணவனின் குறிப்பறிந்து பாசத்திலே திகழ்வேனா
குணமறிந்து மனமறிந்து அன்பு நடை நடப்பேனா

இளமையின் துள்ளலுடன் இயற்கையைதான் பார்ப்பேனா
இளவயது நினைவுகளை நினைவு கூர்ந்து சிரிப்பேனா

தொட்டு விட்டு ஓடி விடும் அலைகளை அணைக்கத்தான் துடிப்பேனா
எட்ட நின்று வானவில்லின் வண்ணத்திலே குழைவேனா

தாலாட்டும் செடிகளோடு தலை சாய்த்து சிரிப்பேனா
மலர்களின் மென்மையை தொட்டுதான் உணர்வேனா

நீலநிற வானத்தின் பொய்மையிலேதான் கரைவேனா
சூரியனின் ஒளிகளிலே தத்துவத்தையே உணர்வேனா

கள்ளமில்லா புன்னகையோடு அனைவரையும் கவர்வேனா
பார்த்து பார்த்து கவனித்தே எல்லோரையும் உபசரிப்பேனா

மகிழ்ச்சியற்ற நினைவுகளிலே வருந்தியேதான் அழுவேனா
வாழ்வின் சிறப்பம்சத்தை நன்றியோடு நினைப்பேனா

நன்றி கொண்டு நண்பர்களை பார்த்து விட்டு வருவேனா
கரம் குவித்து வணங்கி விட்டு என் நன்றியைதான் சொல்வேனா

நெஞ்சைத் தொட்ட மனிதர்களின் பாதங்களைதான தொடுவேனா
சிறிய பெரிய அனாதைகளை அரவணைத்து காப்பேனா

தொண்டு செய்யும் உள்ளங்களை தேடி சென்று பாராட்டுவேனா
தோளோடு தோள் நின்று ஊக்குவித்து காட்டுவேனா

வறுமையிலே திகழ்ந்தாலும் இனிமையிலே மிளிர்வேனா
மாளிகையாக உயர்ந்தாலும் மதி கெடாமல் நடப்பேனா

சுற்றம் கூடி ஒதுக்கி வைத்து தனிமரமாய் நிற்பேனா
ஆழ்கடலின் அமைதியைதான் மனதில் நிறுத்தி தாங்குவேனா

வீழ்ந்து விட்ட விநாடிகளை வேகமாக மறப்பேனா
எழுந்து விட்டு விவேகானந்தரைப் போல் பயமின்றி கர்ஜிப்பேனா

மாந்தர்களின் நலனுக்காக நெக்குருகி பிரார்த்திப்பேனா
உண்மையின் கை கோர்த்து உன்மத்தம் ஆவேனா

பிறந்து விட்ட காரணத்தால் வாழ வேண்டுமே என்று சலிப்பேனா
அன்பின் எல்லையிலே இமயமலைதான் கடப்பேனா

சுட்டு விட்ட வார்த்தைகளின் சூட்டிலேயே கருகுவேனா
தாங்கிக் கொண்டு நிமர்ந்து நின்று கருணையையே பொழிவேனா

வரமே வேண்டாத வரம் கேட்டு உன்னதமாய் உயர்வேனா
பிறருக்காக எப்பொழுதும் செருப்பாகவே உழைப்பேனா

துள்ளி ஓடும் என் கண்ணனை ஓடியேதான் பிடிப்பேனா
ராதையை போல் ஊஞ்சலாடி அவன் இசையிலேதான் கரைவேனா

படபடக்கும் சிட்டுக்குருவியின் இறக்கையைதான் பெறுவேனா
உயிர் பிரிந்து சென்ற பின்னே உயர உயர பறப்பேனா

காலத்தின் வேகத்திலே ஓடி ஓடி களைப்பேனா
மனம் உவந்து சிரித்து மகிழ்ந்து அன்றாடம் வாழ்வேனா

இன்னும் எத்தனை எத்தனை என்று எண்ண முடியாமல் திணறுகிறேனா
இவை எதுவும் காணாமல் இன்னும் சில நொடிகளிலே மறைவேனா

1 comment:

Latha said...

Wonderful Poem!