கருநீலமேனியிலே பட்டுடுத்தி
கால்களிலே சலங்கைக் கட்டி
பவள வாயில் சிரிப்பைத் தேக்கி
சின்னச் சின்னப் பாதம் வைத்து
என் கழுத்தைக் கட்ட ஓடி வரும்
உன் அழகை காண விரும்புகிறேன்
என்னைத் தேடி வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
குழலின் இனிமையிலே
சிரிப்பின் ஜாலத்திலே
அந்திப் பொழுதினிலே
இயற்கையின் விந்தையிலே
நினைவுகளின் அசைவினிலே
இந்த ஏழையின் நெஞ்சினிலே ஆட
என் கண் மூடி செவிகளில் சிரிப்பாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
என் சீடையும் வெண்ணையும்
உன்னை வாவென்று அழைக்க
குழலூதும் கண்ணனை வேண்டாம் என்றே
ஒதுக்கி வைத்த மனைகளில் எல்லாம்
தேடி ஓடி சேவை செய்யும் உன்னை
நினைத்து நினைத்து வியக்கிறேன்
உனக்காக உண்ணாமல் காத்திருக்கும்
என் கன்னத்தில் முத்தமிட வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
பெற்றத் தாயை அழ வைத்து
வேற்றுத் தாயை பித்தாக்கிய
உன் கல் நெஞ்சம் கண்டும்
வியக்கிறேன் மலைக்கிறேன் துடிக்கிறேன்
துன்பத்திலும் சிரிக்கும் உன்னை ஆராதிக்கிறேன்
என் அன்பின் ஆழத்தைக் காண
என் நெஞ்சில் நிலைக்க வருவாயோ
கண்ணா, நீ என்னைக் காண வருவாயோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment