Monday, September 25, 2006

சின்ன சின்ன ஆசை

என் மனதில் தேக்கி வைத்துள்ள சின்ன பெரிய ஆசைகள் எத்தனை எத்தனை! இதோ உங்கள் பார்வைக்கு…


வானவில்லை போல வளைந்து நிற்க ஆசை
மழை சாரலிலே தொப்பி போட்டு நடக்க ஆசை
சூரியனுடன் கிழக்கும் மேற்கும் ஓடவே ஆசை
ஊஞ்சலில் ஆடியே மேகத்தை தொட்டு வர ஆசை

ஐன்னலில் ஊடுறுவும் கிரணங்களை கைகளில் அடக்க ஆசை
பறவையைப் போல உயர பறந்து வர ஆசை
பட்டாம்பூச்சியின் பின்னே கவலையின்றி துரத்த ஆசை
தீண்டிய தென்றலை கட்டியணைக்க ஆசை

குழந்தையின் பட்டுப் போன்ற கைகளை முகத்தில் வைக்க ஆசை
மொட்டையடித்துக் கொண்டு முகத்தை ரசிக்க ஆசை
அலை அலையான கூந்தலுடன் மறுநாளே மாறிவிட ஆசை
குழந்தையைப் போல குறும்பு செய்ய ஆசை

மூளையின்றி ஒரு நாள் பைத்தியமாக மாற ஆசை
பாண்டி விளையாடி விளையாடி களைத்து விட ஆசை
ஈரமான தலையை நீர் தெறிக்க சிலுப்பி விட ஆசை
அவை மற்றவர் மேல் பட்டு அவர் முகத்தின் பாவத்தை ரசிக்க ஆசை

இருட்டில் ஒலிக்கும் ஓசைகளை மூலையில் அமர்ந்து கேட்க ஆசை
மனம் நிறைய துக்கத்துடன் வாய்விட்டு சிரிக்க ஆசை
கிறிஸ்துவ சகோதரியின் தூய்மையான உடையணிய ஆசை
அதனை களைந்தவுடன் தேவதையாக மாறி விட ஆசை

ஆபரணம் அலங்காரம் இன்றி அழகற்று நிற்க ஆசை
கண்களில் ஒளியை தாங்கி பலரை உயர்த்தி விட ஆசை
கைகளில் பணமின்றி பலரிடம் பிச்சையெடுக்க ஆசை
மழைத் துளிகளின் வேகத்திலே என் கண்ணீரை கரைக்க ஆசை

கடலலைகளின் தாக்கத்திலே அதனுள் விழுந்து விட ஆசை
எழுந்து விட்டு பின்னே அதனை எண்ணி விட ஆசை
நேரத்தின் ஓட்டத்தை சிறிது நிறுத்தி விட ஆசை
தாயின் மடியில் படுத்துக் கொண்டு கதறியழ ஆசை

மழை நீரின் சகதியிலே தட்டி தட்டி நடக்க ஆசை
கடற்கரையின் மணலில் அமர்ந்து தியானம் செய்ய ஆசை
கிராமத்து பெண்களின் வெகுளிதனத்தில் மனம் தொலைக்க ஆசை
நுனி வாழை இலையிலே தினமும் ரசம் சாதம் உண்ண ஆசை

பார்த்து பார்த்து உபசரித்து பலர் என்னை கவனித்துக் கொள்ள ஆசை
ஓவியனின் தூரிகை கொண்டு இயற்கையை வரைய ஆசை
ஓடும் காட்டாற்றிலே பரிசலில் செல்ல ஆசை
எறும்பு புற்றின் ரகசியத்தை அறிந்து கொள்ள ஆசை

நாய்குட்டியின் மூக்கின் மேலே என் மூக்கை வைத்து கொஞ்ச ஆசை
நிலவொளியின் அழகிலே கடற்கரையில் நடக்க ஆசை
யாருமற்ற தீவிலே தனியே ஒரு நாள் கழிக்க ஆசை
இமயமலையின் உச்சிக்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை

மனிதர்களின் குணமறிந்து புரிந்து நடக்க ஆசை
அனைத்து கலைகளையும் கரைத்து குடிக்க ஆசை
வறியவர் இல்லாத உலகை காண பலநாள் ஆசை
காதலில் நனைந்து உருகி ராதையாகி விட ஆசை

கண் சிமிட்டும் நேரத்திலே சிறு குழந்தையாகி விட ஆசை
பிரிந்த என் அன்புத் தந்தையை காண மிக்க ஆசை
தெளிந்த ஏரி நீரின்மேல் அமைதி குலையாமல் நடக்க ஆசை
உறைக்கும் பனியின் மேல் உருளத்தான் ஆசை

பிறர் உபாதைகளை என் உடலில் ஏற்றுக் கொள்ள ஆசை
அனைத்து உறவையும் மனதார வாழ்த்தவே ஆசை
பிறர் நலனுக்காக பணத்தையும் மனத்தையும் கொடுக்கவே ஆசை
சிரித்துக் கொண்டே தனிமையிலே சில வருடங்களில் மறையத்தான் ஆசை

1 comment:

Latha said...

Idhu pondra kavithai ezhudha enakkum aasai.