Monday, September 25, 2006

ஏன் செல்கிறாய் என்னை விட்டு?

பெண்ணே!
ஏன் செல்கிறாயோ என்னை விட்டு?

நான் நல்லவள் என்று சொன்னாய்
அன்புடையவள் என்று சொன்னாய்
பண்புடையவள் என்று சொன்னாய்
அறிவுடையவள் என்றும் சொன்னாய்
ஆனால் ஏன் செல்கிறாய் என்னை விட்டு?

உன் வருகை என் வாழ்வில் வந்த வசந்தம்
நம் நட்பு ஏற்றத்தாழ்வில் வந்த பந்தம்
இது சுத்த மனதினால் உணர்ந்த காந்தம்
புரிந்தது இவ்வுலகில் ஏதுமில்லை சொந்தம்
இருந்தும் கேட்கிறது மனம் ஏன் செல்கிறாயோ என்னை விட்டு?

பெற்றோரை பேணிக் காக்க செல்கிறாய்
குழந்தைகளின் ஆரோக்கியம் வேண்டி செல்கிறாய்
ஆசானின் ஆசிர்வாதம் பெறவும் முயல்கிறாய்
சுற்றம் உறவினர் நலன் கருதியும் செல்கிறாய்
என்னை விட்டும் ஏனோ செல்கிறாய்

உறவுகளை பற்றி நாம் பேசினோம்
உணர்வுகளின் கேளிக்கைகளையும் அலசினோம்
உணவையும் தினமும் பரிமாறிக் கொண்டோம்
நட்பையும் கூடவே வளர்த்துக் கொண்டோம்
இருந்தும் ஏனோ செல்கிறாய் என்னை விட்டு

மகிழ்ச்சியின் போது கை குலுக்கிக் கொண்டோம்
துக்கத்தின் போது அடுத்தவர் கைகளைப் பற்றிக் கொண்டோம்
விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொண்டோம்
பிரார்த்தனையில் ஒருமித்தும் அமர்ந்தோம்
இருப்பினும் இவை மறந்து என்னை விட்டு ஏனோ செல்கிறாய்

ஆன்மீகம் அலசிப் பார்த்தோம்
அதன் முறைப்படி நடக்க நினைத்தோம்
ஆன்மாவை நினைவு கூர்ந்தோம்
இருப்பினும் உணர்வுகளில் தடுமாறினோம்
இந்த தடுமாற்றத்தில் ஏனோ என்னை விட்டு செல்கிறாய்

விண்மீன்களின் மினுமினுப்பை கண்டேன்
உன் கண்களில் அதன் மர்மம் கண்டேன் என் தோழி
பரந்த கடலை நினைத்துக் கொண்டேன்
உன் மனதை என் முன் நிறுத்தினாய் என் தோழி
ஆனாலும் ஏனோ செல்கிறாய் என்னை விட்டு?

இந்த தோழியிடம் அன்பைத் தவிர வேறில்லை
உன் பிரிவை நினைத்து வருந்தாத நாளில்லை
நித்தமும் உன் குரல் கேட்பேனா என்றும் தெரியவில்லை
கலங்கிய என் கண்களில் கண்ணீரைத் தவிர வேறில்லை
இருந்தும் நான் இப்பொழுது கூறுகிறேன் ‘போய் வா பெண்ணே’

உன் கடமைகளை முறையே செய்து கொண்டிரு
அன்பை எதிரிக்கும் வழங்கி கொண்டிரு
ஆன்மீகத்தில் உயர பறந்து கொண்டிரு
இவ்வுலக வாழ்வையும் ரசித்துக் கொண்டிரு
திரும்பி வந்து உன் முகத்தை எனக்கு காண்பித்துக் கொண்டிரு

1 comment:

Latha said...

Touching poem!