Monday, January 29, 2007

மனமும் இதயமும் – உரையாடல் இரண்டு

[கவிஞனைச் சுற்றி பழைய கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க பலவித நினைவுகள் அவனை ஆக்கிரமிக்கின்றன. அச்சூழலில் இரு குரல்கள் உரையாடுகின்றன. நினைவுகளில் தவிக்கும் கவிஞன் ஆச்சரியத்தில் கண்ணை மூடி கேட்கத் துவங்குகிறான். வாருங்கள் நாமும் கேட்போம்....]


வணக்கம், இதயமே!
வணக்கம், மனமே!

என்ன வெகு நாட்களாக உன்னைக் காணவில்லையே?
நான் இங்குதானே இருக்கிறேன்.

நான் உன்னைப் பார்க்கவில்லையே
உனக்கு ஆயிரம் சிந்தனைகள் அல்லவா

பார்! எடுத்தவுடனேயே என்னைத் இப்படி தாக்குகிறாயே. சரி, உன் நிலைமை எப்படி?
எனக்கென்ன ஆயிற்று?

உன் வலியைப் பற்றிக் கேட்கிறேன்
எந்த வலி?

உன் எழுத்தை நிறுத்தி வைத்த வலி?
சில வலிகள் மறைவதில்லை

பின்னே எழுத ஆரம்பித்து விட்டாயா?
ஆம்

எப்பொழுதிலிருந்து?
சில மாதங்களுக்கு முன்

அப்படியா! ஏன் இந்த முடிவு?
சில நேரங்களில் வலியால் நான் வலுவடைகிறேன்

நல்ல முதிர்ச்சி உன் பார்வையில்?
நன்றி.

வலியைத் தருவது யார் என்று புரிந்ததா?
ஓரளவு

யார்? உறவுகள் தானே?
இல்லை. சாட்சாத் நானேதான்.

என்ன?
உண்மைதான்

நம்ப முடியவில்லை. எப்படி சொல்கிறாய்?
என் எதிர்ப்பார்ப்புகள் என்னை ஏமாற்றும் போது வலியை அனுபவிக்கிறேன்

எங்கிருந்து பெற்றாய் இத்தனை ஞானத்தை?
தனிமையில் ஒர் அலசல். அவ்வளவுதான்

ஆன்மீகத்தில் நாட்டம் வந்து விட்டதோ என்று பயந்து விட்டேன்
எதை ஆன்மீகம் என்கிறாய்?

இவ்வாறு தத்துவம் பேசுவதும் தன்னையே அலசுவதும்
அதற்கு பெயர் ஆன்மீகம் என்று கூறினால் அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.

உனக்கு வேறு என்னத் தெரியும்?
ஒன்றும் தெரியாது

நீ எப்பொழுதும் அடக்கம்தான். சரி, பழையக் கேள்விக்கே வருகிறேன். உறவுகளைப் பற்றி உன் கருத்து...?
அன்பினால் அனைவரும் உறவினர்களே

ஆஹா.... அருமை. ஆனால் அதே உறவுகளால் நீ கிழிபடும் போது?
நான் அவர்களை மனதாலும் திருப்பி கிழிக்காமல் பார்த்துக் கொள்ள முயல்கிறேன்

நீ ஜடமோ?
இல்லை. உணர்வுகள் நிறைய உண்டு

வஞ்சம் தீர்க்க மாட்டாயோ?
வருத்தமும் வலியும் மட்டும் நிறைய எஞ்சி நிற்கும். அதை கவனத்துடன் கையாள வேண்டும்

அதை மறக்க நினைப்பாயோ?
எதற்கு மறக்க வேண்டும்

உனக்கு கோபம் வராதோ?
என்னை அதற்குள் ஞானியாக்கிவிட்டாயே, மனமே

யாரிடம் இதையெல்லாம் கற்றுக் கொண்டாய்?
என் அனுபவங்கள்

எதையாவது சாதிக்க விருப்பமுண்டா?
உண்டே

அப்பாடா உனக்கும் ஆசை உண்டு என்றதும் தான் நிம்மதி அடைந்தேன். அப்படி என்ன ஆசை, இதயமே?
நிகழ்காலத்தில் மட்டும் வாழ ஆசை

உன்னைப் போய் கேட்டேனே! உன்னைப் பற்றி ஒரு வரியில் சொல்லேன்
நான் ஒரு பிறவிக் காதலி

யாரைக் காதலிக்கிறாய்?
கண்ணனை

அப்படியெனில் என்னை ஏற்றுக் கொள்ளுமாறு உன்னிடம் வைத்த விண்ணப்பம் என்னவாயிற்று?
நான் மறந்ததாக கூறவில்லையே.

பிறகு உன் காதல்........?
உன் ஆன்மாவில் என் கண்ணனைக் காண்கிறேன். அது சரி. ஏன் நீ தெளிந்து விட்டாயா?

மன்னித்துவிடு. உன் தெளிவு என்னிடம் இல்லை. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லேன்?
ஒன்றும் செய்யாதே

புரியவில்லை
வருவதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள். புரிந்து கொள்வாய்

சரி, முயல்கிறேன். அது வரை எனக்காக காத்திருப்பாயா, இதயமே?
நிச்சயம். கொடுத்த வாக்கை நான் என்றும் தவற விடுவதில்லை

நான் தடம் புரண்டாலும் என்னை அரவணைப்பாயா?
நிச்சயமாக

உன் சந்திப்பினால் தூய்மையடைந்தேன். விரைவில் உன்னை சந்திக்கிறேன்
மிக்க மகிழ்ச்சி, மனமே

உன் நினைவுடன் என்றும் நான்
நானும் அப்படியே


[இந்த உரையாடலுக்கு பின் கவிஞன் வாழ்த்து அட்டைகளையும் கடிதங்களையும் அமைதியாய் மீண்டும் தன் பெட்டியில் பத்திரமாக எடுத்து வைத்தான்]

2 comments:

Unknown said...

நல்லாயிருக்குங்க கவிதை :)

Padmaja said...

நன்றி, தேவ்.