வண்ணங்கள் குழைய குழைய
வான்முகிலின் கருமை கரைய
ஓடிவரும் நங்கையவள் நனைய
காண்போரை மயக்குவது ஓவியக்கலை
கண்களில் குறும்பு மின்ன
கன்னங்களில் செம்மை என்ன
வெட்கப் புன்னகைப் பாவையவளின்
இளமையால் மயக்குவது சிற்பக்கலை
மலர் பாதங்களால் ஆடியே
முத்திரை கைகளால் ஏந்தியே
முகநயங்கள் கொண்டு கெஞ்சியே
கரைந்து அழைப்பது நடனக்கலை
மூச்சு வாங்கும் ஏற்றஇறக்கத்தை
தலையாட்டும் ராகங்களின் பாவத்தை
செவ்விதழால் கசிந்துருகும் கானத்தை
செவிக்கு விருந்தளிப்பது இசைக்கலை
மொழியன்னையின் ஆசிப் பெற்று
வார்த்தைகளை கட்டி அணைத்து
காதல்தனை காவியமாக்கி படைத்து
காலமும் நிற்பது இலக்கியக்கலை
கலைகள் பலநூறும் உண்டு
அறியவும் தெளியவும் உண்டு
கற்பவை எவையெவை என்று
புரியாமல் விழித்தேன் நின்று
அன்பே இதயத்தின் உன்னதகலை
பணிவே மனதின் உயர்ந்தகலை
உணர்ந்தே கற்பேன் (இவ்)வாழும்கலை
ஏனெனில் இதுவே சிறந்தகலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment