Saturday, November 25, 2006

என் கண்ணனை கண்டீரோ

காலையும் மாலையும் வானத்தை சிவக்க செய்யும் ஆதித்யனின் உறவிலே
பரந்து விரிந்த கடலரசனும் மெய் மறந்து நிற்கின்ற வேளையிலே
கடலும் தன் அங்கமான நீரை சிறிது சிறிதாக தொலைக்கும் தருணத்திலே
அவை மேலெழும்பி நடு வானத்தில் கார்மேகமாய் மாறிவிட்ட நேரத்திலே
என் கண்ணனின் நிறத்தை ஒத்ததனால் ஏற்பட்ட பெருமையினாலே
என் கண்கள் சிரித்தன வானத்தில் மிதக்கும் அந்த மேகத்தின் செருக்கை கண்டதாலே

காற்றின் தாலாட்டிலே மேகமும் இன்னிசையோடு கானகத்தே நகர
களைத்த என் கண்களுக்கு விருந்தாக மயிலொன்றும் அங்கு வர
மழையில் நனைய போகும் மகிழ்ச்சியிலே ஆண் மயிலும் தோகை விரித்தாட
கண் கொண்ட மட்டும் கண்டு விட்டு நானும் மெய் மறந்து அதன் அழகில் லயிக்க
என் கண்ணனின் சிகையில் அமரும் பெருமையை நினைத்து மயிலும் செருக்கிலே ஆட
தவறி விழுந்த இறகொன்றை என் கைகளும் எடுத்துக் கொண்டன என் அவனுக்காக

என் பொக்கிஷத்தை கையிலேந்தி மேலும் என் கால்கள் நடக்க
கூர்மையான என் கண்களில் ஒர் ஓவியனின் தூரிகையும் பட
கண்ணிமைக்க மறந்து அவன் வண்ணக் குழைவிலே வளரும் ஓவியத்தைக் இரசிக்க
மஞ்சள் உடையணிந்த அழகு கொஞ்சும் முகம் என்னை வாவென்று அழைக்க
கலைஞனின் கால்களில் வெட்கமின்றி விழுந்து அந்த ஓவியத்தையும் நான் பெற
இடுப்பில் செருகிய மயிலிறகுடன் இதையும கட்டியணைத்து நடந்தேன் மெதுவாக

கல்லும் முள்ளும் இறகும் ஓவியமும் என் பயணத்தை கடினமாக்க
ஓய்வு வேண்டிய கால்களும் ஒரு சிறிய வீட்டின் முன் நிற்க
சிற்பியொருவன் உளியால் சிறு உருவத்தை செதுக்கும் அழகை கண்டு வியக்க
பசி மறந்து தரையில் அமர்ந்து அந்த சிற்பத்தின் முழு அழகை காண விழைய
மதி மயக்கும் புன்னகையுடன் நிற்கும் என் காதலனை அங்கும் கண்டு அதிர
சிற்பியே வலிய வந்து என் கைகளில் அவனை திணித்தான் அன்பாக

சிற்பமும் ஓவியமும் மாறி மாறி என் உணர்வுகளை அலைகழிக்க
என் செய்வேன் என்று தெரியாமல் நானும் ஒரு மூங்கில் காட்டிற்குள் நுழைய
ஓங்கி வளர்ந்த மூங்கிலை கண்டு நானும் வியப்பில் ஆழ்ந்து நிற்க
இடைச்சிறுவன் ஒருவன் சிரித்துக் கொண்டே ஒரு மூங்கில் குழாயை என் கையில் திணிக்க
என் இனிமையான இசைக்கு அகத் தூய்மையேக் காரணம் என்று புல்லாங்குழலும் தத்துவம் பேச
அறியாமையின் விளிம்பில் இருக்கும் நான் ஒன்றும் புரியாமல் நடந்தேன் அவன் நினைவாக

புல்லாங்குழலும் என் உடைமைகளுடன் சேர்ந்து சுமையைக் கூட்ட
போதாதென்று காட்டுப் பூக்களை ஆசையுடன் நான் பறித்து மாலையாக்க
எப்படி எடுத்து செல்வது இந்த மாலையை என்று விழித்து நானும் நிற்க
மூளையின் ஓரத்தில் பொறித் தட்டி அந்த மாலையை நானே சூட
அடுத்து என்ன என்று புரியாமல் கண்களும் கால்களும் கெஞ்சிக் கேட்க
இனி ஒரு அடி வைக்க இயலாத நிலையில் தடுமாறினேன் களைப்பாக

இந்த நிலையிலே பசிக் காதை அடைத்தது
தாகத்திலே நாவும் வறண்டது
தூக்கமின்மையால் கண்கள் எரிந்தன
முட்கள் பதம் பார்த்ததால் கால்களில் இரத்தம் வழிந்தது
என் மென்மையான கரங்களும் சிவந்தன
கைகள் தூக்கி வந்த களைப்பால் வலித்தன
தலை கனத்தன தோள்கள் கெஞ்சின
முதுகோ படுக்க தூண்டியது
கண்ணீர் முத்துக்கள் தெறித்தன
துக்கம் தொண்டையை அடைத்தது

அனைத்தும் அறிந்தவன் பண்பிலே உயர்ந்தவன்
அழகிலே நிகரற்றவன் வார்த்தையிலே வல்லவன்
பிறர் துன்பம் துடைக்க வருபவன் என்றார்களே
அனைவரும் பொய்யர்களோ
அவன் நெஞ்சம் கல்லால் ஆனதோ
என் அன்பு அவன் கண்களில் விழவில்லை போலும்
என்று பல மணி நேரம் அரற்றிய வேளையிலே

நறுமணம் கமழ, காற்றிலே கீதம் இசைக்க
ஜல் ஜல் என்று சலங்கை ஒலி இசையை கூட்ட
சுருண்ட கூந்தல் தென்றலில் இனிதே அசைந்தாட
உடல் முழுவதும் ஆபரணம் ஜொலிக்க
பீதாம்பரம் அணிந்த கருமேனியாய் அழகில் மிளிர
காந்த கண்களில் அன்பைத் தேக்கி
சிவந்த உதட்டில் சிரிப்பை நிறுத்தி
அருகில் வந்து கண்ணனே என் முன் நிற்க

நானும் என் கழுத்திலிருந்த மாலையை அவனுக்கு சூட்ட
பிறகு என் புல்லாங்குழலும் மயிலிறகும் அவன் உடலில் ஏற
அறிவும் அழகும் இல்லாத என்னையும் அவன் ஏற்க
என் துன்பம் அனைத்தும் சிட்டென பறக்க
மகிழ்ச்சியான அந்த நேரத்தில் ஒரு பாறையில் கைக் கோர்த்து அமர்ந்தோம்

என் கண்ணீரைத் துடைத்தான்
கைகளை ஆதரவாக தடவினான்
கால்களில் வழியும் இரத்தத்தை தன் உடையால் துடைத்தான்
ஓவியத்தையும் சிற்பத்தையும் இரசித்தான்
பழங்களையும் உண்ண வைத்தான்
கைகளால் நீரை நிரப்பி என்னை குடிக்கவும் வைத்தான்
அழுக்கான என்னை கண் கொட்டாமல் பார்த்தான்
பிறகு முத்துப்பல் தெரிய என்னைப் பார்த்து சிரித்தான்
பேதை பெண்ணே! நான் யாரென்று தெரியவில்லையா இன்னும்
என்றும் எள்ளி நகையாடினான்

ஒரு கணம் என் மாயையைதான் அகற்றினானோ
இல்லை என் சிந்தைதான் கலங்கிவிட்டதோ
புரியாமல் என் கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன்
அங்கே……..அங்கே…….
அவனே கார்மேகமாய் மயிலாய் ஓவியனாய்
சிற்பியாய் இடைச்சிறுவனாய் புல்லாங்குழலாய்
மலர்களாய் நீராய் மரங்களாய் நானாய் அவனாய்
மாறி மாறி காட்சியளித்தான்

புரியாமல் விழித்த என்னைப் பார்த்து விளித்தான்
அறியாமையில் மூழ்கி தவிக்கும் அன்புப் பெண்ணே!
என்னை தோழனாக ஏற்றுக் கொண்டுள்ள சகியே!
காதலில் தினமும் உருகி உன்னையே மறக்கும் என் காதலியே!
என் உருவத்தில் மயங்கி உண்மையை மறந்த பேதையே!
நானும் நீயும் யாரென்று அறிய முயற்சி செய்

என் அழகும் வெளித் தோற்றமும் உன் கற்பனையே
உன் ஐம்புலன்களும் இவ்வுலகமும் என் திருவிளையாட்டே
உன் உடலும் உள்ளமும் வெறும் மாயையே
உன் சொந்தமும் பந்தமும் புறக் கண்களுக்கே
உன் அறிவும் அகந்தையும் நான் கொடுத்த பொய்மையே
என் ஆராதனையும் அவதாரமும் உன் சாதனைக்கே
இதை உணர்ந்து உடனே விழித்துக் கொள்
நானும் நீயும் அன்பைத் தவிர வேறி;ல்லை
ஆன்மாவான உனக்கு உருவம் என்று ஒன்றில்லை
இதை புரிந்துக் கொண்டு பிறகு என்னை அழைப்பாய்
என்று கூறி விட்டு என் கண்ணன் மறைந்தே விட்டான்

நான் எங்கு சென்று அவனைத் தேடுவேன்
அவன் கூறிய உபதேசம் என் காதில் விழவில்லையே
அவனையல்லவோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்
பல பெண்களை பித்தனாக்கிய எத்தனல்லவோ அவன்
இருப்பினும் என் மனம் அவனுக்காகவே ஏங்குகிறதே
என்ன கல்நெஞ்சம் அவனுக்கு என்னை தவிக்க விட்டு செல்ல

பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்
அழகு வேண்டேன் அறிவும் வேண்டேன்
சுற்றம் வேண்டேன் சுகம் வேண்டேன்
பேச்சும் வேண்டேன் மூச்சும் வேண்டேன்
தத்துவம் வேண்டேன் உண்மையும் வேண்டேன்
உயிரும் வேண்டேன் ஒன்றும் வேண்டேன்

ஆயிரத்தில் ஒருத்தியாக நான் இருந்தாலும்
என் மனம் அவனைத் தவிர வேறொன்றும் விரும்பவில்லை
எனக்கு அவனைத் தவிர வேறெதிலும் நாட்டமில்லை
ஒரு முறை என் அன்பிற்கு அடிபணிந்தவன்
வேறு பெண்களின் அழைப்பில் பறந்து சென்றானோ
இல்லை என்னை மறந்து தான் விட்டானோ
அவன் தத்துவமும் புரியவில்லை
அவனையும் புரிந்துக் கொள்ள முடியவில்லையே

என் கண்ணனை கண்டீரோ யாரேனும்
என் மாயக் கண்ணனைத்தான் கண்டீரோ

என் கண்ணனை தான் கண்டீரோ எங்கேனும்
என் இதயக் கண்ணனைத்தான் கண்டீரோ

அன்பு

அன்பு தன்னலமின்றி தருவதற்கே
அன்பு உணர்ந்து குதிப்பதற்கே
அன்பு அனைவருடன் பகிர்வதற்கே
அன்பு என்றும் தூய்மையானதே

அன்பு மகிழ்ச்சியில் துள்ளும்
அன்பு வெட்கத்தில் மலரும்
அன்பு அனுபவிக்க துடிக்கும்
அன்பு அழிவல்ல நினைக்கும்

அன்பு தருவது வலியை
அன்பு திணிப்பது களிப்பை
அன்பு வெல்வது நெஞ்சை
அன்புக்கு தேவையில்லை மூளை

அன்பு அழகில் முதலில் மயங்கும்
அன்பு செய்த மனம் தவிக்கும்
அன்பு இல்லை என்றும் பாவம்
அன்பு வெல்வது அல்ல விரும்பும்

அன்பு உண்மையை கணிக்க தவறும்
அன்பு கோபத்தையும் தூண்டும்
அன்பு வயதை அல்ல காணும்
அன்பே ஞானியை உருவாக்கும்

அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை

அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்

அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை

மெளனம்

அலையென முழங்கும் எண்ணங்களில்
என்னை உணர்ந்த தருணங்களில்
இருளான பாதையில் நுழைகையில்
அறிந்தேன் நான் ஆசையின் பிடியில்

அமர்ந்தேன் முகப்பில் பொறுமையுடன்
கேட்டேன் காலடிச்சத்தம் கவனமுடன்
எழுந்தேன் கொல்வதென்ற முடிவுடன்
இல்லையெனில் வாழவிடுமா அமைதியுடன்

எண்ணமெனும் ரம்பையின் நாட்டியத்தில்
என்னையே இழக்கவிருந்த நேரத்தில்
உண்மையை புரிந்துகொண்ட சிலிர்ப்பில்
வேரோடு பிடித்தேன் அதை தியானத்தில்

ஆசைகள் கால்பிடித்து கெஞ்சினவோ
எண்ணங்கள் கதவைதட்டி நுழைந்தனவோ
பலவித செருக்கையும் அழித்தனவோ
என்சிரிப்பில் கள்ளமனைத்தும் அழிந்தனவோ

எனக்கென வரலாறு ஏதுமில்லை
விதியென பேசுவதில் அர்த்தமில்லை
ஆசான் நானே வேறு யாருமில்லை
மெளனமே என்றென்றும் எந்நிலை

காண்பவை மெளனத்தின் வெளிபாடே
எண்ணங்கள் மெளனத்தின் வெளிபாடே
ஆனால் மெளனம் அனைத்தையும் தாண்டியநிலை
ஏனெனில் மெளனமே ஆத்மனின் நிலை

Saturday, November 18, 2006

நட்சத்திரப் பார்வை

கண்கவரும் மாலைப் பொழுதின் நேரத்திலே
கடற்கரையில் நானும் தலைசாய்த்த வேளையிலே
கண்டேன் கடலரசனின் ஓயாத விளையாட்டிலே
அன்பின் வெளிபாடாய் கணக்கற்ற அலைகளிலே

இரவும் பகலும் அவளான கடற்கரையை
பகிரங்கமாக அவன் காதலிக்கும் கூத்தை
வியந்தேன் இயற்கையின் விந்தையைக் கண்டே
சிரித்தேன் நிதம்தவறாத நாடகத்தைக் கண்டே

மறைந்தன என்னைச் சுற்றிய குரல்களும்
விரைந்தன என்மேல் விழுந்த நிழல்களும்
நிறைந்தன எங்கும் கருமையான இருளும்
நிலைத்தன வான்நோக்கிய என் விழிகளும்

விண்மீன்கள் என்னைக்கண்டு கண் சிமிட்டினவே
அதன் அன்பில் என்நெஞ்சம் கரைந்தனவே
கருவிழிகள் ஒவ்வொன்றாய் காண விழைந்தனவே
வானத்து வரைபடத்தைக் கண்டு மலைத்தனவே

நட்சத்திர அளவை மனம் உணர்த்த
அதன் சூடும் அறிவைத் தாக்க
நெஞ்சம் என் கண்ணை மட்டும் ஏற்க
இவையின்றி எப்படியிருக்கும் என்றே நினைக்க

கவிஞர்களின் கவிதைகள் தடுமாறி தவிக்குமோ
வானியல் வெறும் கட்டுக்கதையாகி இருக்குமோ
வானம் அழகின்றிதான் இருண்டு போகுமோ
சூரியனின்றி இவ்வுலகமும் அழிந்து இருக்குமோ

நட்சத்திரத்தின் உயர் நிலையை உணர்ந்தேன்
ஒவ்வொன்றும் தேவையென்பதை அறிந்தேன்
ஒற்றுமையின் அழகையும் சிறிதே கற்றேன்
கண்ணும் அறிவும் ஒருசேர எழுந்தேன்

நான் கற்றப் பாடத்தைக் கேட்பாய்
என் மனம் கொண்டே அதை உணர்வாய்
நீயொரு நட்சத்திரம் என்றே அறிவாய்
நானும் நட்சத்திரமே என்பதை ஏற்பாய்

Wednesday, November 08, 2006

உன்னையே காண்கிறேன்

தட்தட்டென தரையில் நர்த்தனமாடும் மழைநீரின் ஆட்டத்தில்
வெகுளியாய் துள்ளியோடும் புள்ளிமானின் மிரட்சியில்
கவலையின்றி உயரப் பறக்கும் பறவையின் சுதந்திரத்தில்
அதிகாலை சோம்பலை தட்டி எழுப்பும் சூரிய கிரணங்களில்

ஓய்வின்றி புரியாமல் உழைக்கும் கடலலையின் ஓங்கிய ஓசையில்
சிரிக்கும் பூக்களை முத்தமிட துடிக்கும் தேனீயின் ரீங்காரத்தில்
கண்கவர் வண்ணங்களில் பறக்கும் பட்டாம்பூச்சியின் படபடப்பில்
வெறுமையை அருமையாய் காட்டி கண்கட்டும் நீலவானில்

செருக்கோடு வானத்தில் மிதக்கும் நீருண்ட கருமேகங்களில்
உடல் நடுங்க மனம் கலங்க கம்பீரமாய் முழங்கும் இடியோசையில்
மௌனமாய் தியானம் செய்யும் மலையுச்சியின் இரகசியத்தில்
பெண்மையின் நாணத்துடன் கூடிய நதிநீரின் நளின ஓட்டத்தில்

வெள்ளிக்கம்பிகளாய் தரையில் விழும் அருவியின் அவசரத்தில்
அழகான வெண்ணிலவை பிரதிபலிக்கும் ஏரியின் அமைதியில்
உரிமையோடு உறவாடும் தென்றலின் பட்டுப் போன்ற மென்மையில்
மனதை உருக்கும் அழிவை செவ்வனே செய்யும் புயலின் சீற்றத்தில்

பூமியில் நடந்த எண்ணற்ற பாதைகளின் காலடிச்சுவடுகளில்
உறைந்து படர்ந்து நிற்கும் பனிமலையின் வெண்மையில்
பறவைகளின் கானத்தில் திளைக்கும் கானகத்து மரங்களின் பசுமையில்
கடினவாழ்வின் சின்னமாம் வறண்ட பாலைவனத்தின் மண்விரிப்பில்

காண்போரை மயக்கும் வானவில்லின் வண்ணகுழைவினில்
உயிரை வருடிச் செல்லும் கவிஞனின் வார்த்தை ஜாலங்களில்
காலம் முழுதும் நெஞ்சில் வலியைத் தரும் காதலில்
கள்ளமறியா மனங்கொண்டு உயிரையும் தரும் அன்பில்

அனைத்திலும் அனைத்திலும் உன்னையே காண்கிறேன்
உன் காலடியில் வீழ்ந்த கணங்களிலும் உன்னையே காண்கிறேன்
உன் பாராமுகத்திலும் உன்னையே நினைத்து வாழ்கிறேன்
இறப்பை எதிர்நோக்கிய என் உயிரிலும் உன்னையே காண்கிறேன்

Friday, November 03, 2006

என் குரல் கேட்பாய் கண்ணா


கோகுலத்து நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து
பல மனைகளில் அழையாமல் நுழைந்து
குறும்பு செய்தே களைத்துப் போய்
என் கழுத்தைகட்டி உணவு உண்டு
அந்தி பொழுதின் குளிர்ந்த கவர்ச்சியில்
என் மடியில் படுத்து சிரித்துக்கொண்டே
மெல்லிய குரலில் வருடிச் செல்லும்
என் ஆராரோ இசையில் நீயும் மயங்கியே
விளையாடி களைத்த உடல் இறைஞ்ச
உன் கேசத்தை இதமாய் கோதிவிடும்
என் கையை பிடித்த உன் பிஞ்சுக்கரங்கள்
ஆதரவு கிடைத்த மகிழ்ச்சியில் சிறிது
கண்மூடி உவகையுடன் உலகம் மறந்து
தூங்கும் வேளையில் என் கண்கள்
உன் கருநீல அழகுமுகம் கண்டு
லயித்துப் போன பெருமை நெஞ்சுடன்
கண்திருஷ்டி கழிக்க இறைவனை வேண்டி
உன் குறும்பில் நானும் பொறுமை இழந்து
உன்னைத் திட்டிய கணங்களை நினைத்தே
உன் பாதம் எடுத்து என் கண்ணில் ஒற்றி
அதன் மென்மையில் கரைந்து கண்ணீர்விட
வெண்ணெய் திருடும் கயவனின் தாயே
என்றே அனைவரும் என்னை இகழ்ந்தாலும்
ஒருகணமும் உன்னைவிட்டு பிரிய மனமின்றி
அணைத்து அரவணைத்து அன்புடன் காப்பாற்றவே
துடிப்பவள் இந்த பேதை என்பதை
புரிந்து கொள்வாயோ என் செல்ல மகனே