சின்னச் சின்ன புள்ளிவச்சு
சிக்கனமா கோடு போட்டேன்
வண்ண வண்ண நிறங்களவச்சு
வண்ணமய கோலம் போட்டேன்
சைக்கிள்ல போற நேரத்தில
சிவப்பி என்னத்தான் பாத்தாயே
கண்டாங்கி சேலக் கட்டி
கன்னமெல்லாம் சிவக்க நின்னேன்
வெள்ள சிரிப்பு நா சிரிக்க
கண்ணிமைக்க மறந்தாயே
வரப்புக்குள்ள கைகோத்து
வேலைக்குத்தான் போனோமே
தூக்குவாளி சோத்தை எடுத்து
என் கையால உனக்கு தந்தேனே
வேப்பெண்ண தடவியே நானும்
தலசிவி கனகாம்பரம் வெச்சேனே
அழகு நானேன்னு சொல்லிகிட்டே
தலசுத்தி கண்திருஷ்டி எடுத்தாயே
குடிலசக்குள்ள நா நிக்க
வெளிய நின்னு தண்ணி குடிச்ச
பக்குவமா உம் மனசதான்
எங்கிட்டயும் சொல்லிபுட்ட
பொட்டப்புள்ள நா குனிய
சம்மதமுன்னு எடுத்துகிட்ட
எங்கண்ணுக்குள்ள நீ இருக்க
மைவைச்சு அழகு பாத்தேன்
பட்டணத்துல வேலக்குதான
போகணுமின்னு சொல்லிப்புட்ட
உன்ன பாக்காத நேரத்துல
மைகரைஞ்சு நா அழுதேன்
மைலு மைலா நடந்தே தெனமும்
உன் வரவுக்குதான் காத்திருக்கேன்
பட்டணத்து அழகிகள கண்டு
மயங்கியே என்ன மறந்தீயோ
மங்களமா உனக்கு புடுச்ச
மஞ்சள தேச்சு நானும் நிக்கேன்
என் பாட்டு காத்துல விட்டேனே
எசப்பாட்டு பாட மறந்தாயோ
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சேன் ராசா
இந்த ராசாத்திய விட்டுட்டீயோ
உன் பிரிவு என்ன வருத்த
வொலகமே சோகமா இருக்கோ
என் உசிர எடுத்து போனவனே
இந்த பிணத்த பாக்க வருவாயோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment