Friday, December 29, 2006

இங்க கொஞ்சம் கேளுங்க – 3

பட்டணம் வந்து சேந்த பொறவு
பட்டாளம் சேர போனேனே

பணத்த சேத்து காத்துகிட்டா
சிங்காரியோட இருப்பேனே

ஓடி ஓடி உழைச்சாலுமே
உடம்பு வலி தெரியலியே

எங்கண்ணுக்குள்ள வாரவள
நெனச்சு மனசு தாங்கலியே

ஆத்தா பின்னே ஒளிஞ்சு நின்னு
நீ முழிச்சு பாத்த பார்வையில

அத்தான் நானேன்னு ஏத்துகிட்டு
வெக்கப்பட்ட சிவத்தபுள்ள

எம்.சி.ஆரு படத்தப் பாத்துபுட்டு
துள்ளி குதிச்ச என் செல்லம்மா

குருவிங்களோட ஓடுனயே
என் கண்ணான கண்ணம்மா

பச்சப்புடவ கொசுவம் கட்டி
பாட்டு கேட்ட வெகுளிப்புள்ள

பட்டு பட்டுன்னு பேசிபேசி
பட்டாசா பொரிஞ்ச புள்ள

கலங்கி குலுங்கி அழுதநேரம்
என் நெஞ்சுக்குள்ள வேகுதடி

உன்ன விட்டு பிரிஞ்ச சோகம்
சுண்ணாம்பா எரிக்குதடி

நீ சிரிச்ச சிரிப்பு எங்காதுக்குள்ள
சுத்தி சுத்தி போகுதடி

கண்ண மூடி நா படுக்கயில
கண்ணீரத்தான் சிந்துதடி

ஒசரமான உன் நெனப்பு
வந்து வந்து போகுதடி

உன் சாந்து பொட்டு மொகத்த காண
நெஞ்சு ஏனோ ஏங்குதடி

கேள்வி ஒன்னு மனசுக்குள்ள
உம் மாமனத்தான் நினக்கிறியோ

வெவரம் புரியாத அழகுபொண்ணே
எனக்காகவே நீ காத்திருப்பியோ

இங்க கொஞ்சம் கேளுங்க - 2

ரோசா நானு ராசா நீயின்னு
சொல்லி சொல்லி மாஞ்சியேடா

என் கன்னங்குழி மயக்கத்தில
சொக்கி போயி நின்னயேடா

தலல குட்டி கவித படிச்ச
மொழி தெரியாம நா முழிக்கயில

கஞ்சி தண்ணி ஊத்தினயே
நா சுரம் வந்து அனத்தயில

சோறு தண்ணி இறங்காம
நானு இங்க தவிக்கேனே

பொங்கி போட நானொருத்தி
காத்து காத்து நிக்கேனே

கொஞ்ச கெஞ்ச நா இருக்க
வேற புள்ள நெனச்சீயோ

கண்ணீருல நாந்தவிக்க
கை கழுவி விட்டீயோ

வெட்டிப் பேச்சு பேசுரேன்னு
வெட்டிவிட்டு போயிட்டீயோ

அன்பு காட்ட நாயிருக்க
வேற அன்பதான் கண்டீயோ

கோபமில்ல நீ என் உசிரு இல்ல
சேதி சொல்ல தோழியில்ல

மூஞ்சி தூக்க மனசில்ல
நீயும் இங்க வருகயில

பொங்கல் வர போகுதய்யா
உன் முகத்த எனக்கு காட்டுவியா

கண்ணாலம் கட்ட மனசில்லயா
இல்ல என்னத்தான் பிடிக்கலயா

இங்க கொஞ்சம் கேளுங்க

சின்னச் சின்ன புள்ளிவச்சு
சிக்கனமா கோடு போட்டேன்

வண்ண வண்ண நிறங்களவச்சு
வண்ணமய கோலம் போட்டேன்

சைக்கிள்ல போற நேரத்தில
சிவப்பி என்னத்தான் பாத்தாயே

கண்டாங்கி சேலக் கட்டி
கன்னமெல்லாம் சிவக்க நின்னேன்

வெள்ள சிரிப்பு நா சிரிக்க
கண்ணிமைக்க மறந்தாயே

வரப்புக்குள்ள கைகோத்து
வேலைக்குத்தான் போனோமே

தூக்குவாளி சோத்தை எடுத்து
என் கையால உனக்கு தந்தேனே

வேப்பெண்ண தடவியே நானும்
தலசிவி கனகாம்பரம் வெச்சேனே

அழகு நானேன்னு சொல்லிகிட்டே
தலசுத்தி கண்திருஷ்டி எடுத்தாயே

குடிலசக்குள்ள நா நிக்க
வெளிய நின்னு தண்ணி குடிச்ச

பக்குவமா உம் மனசதான்
எங்கிட்டயும் சொல்லிபுட்ட

பொட்டப்புள்ள நா குனிய
சம்மதமுன்னு எடுத்துகிட்ட

எங்கண்ணுக்குள்ள நீ இருக்க
மைவைச்சு அழகு பாத்தேன்

பட்டணத்துல வேலக்குதான
போகணுமின்னு சொல்லிப்புட்ட

உன்ன பாக்காத நேரத்துல
மைகரைஞ்சு நா அழுதேன்

மைலு மைலா நடந்தே தெனமும்
உன் வரவுக்குதான் காத்திருக்கேன்

பட்டணத்து அழகிகள கண்டு
மயங்கியே என்ன மறந்தீயோ

மங்களமா உனக்கு புடுச்ச
மஞ்சள தேச்சு நானும் நிக்கேன்

என் பாட்டு காத்துல விட்டேனே
எசப்பாட்டு பாட மறந்தாயோ

நெஞ்சுக்குள்ள உன்ன வச்சேன் ராசா
இந்த ராசாத்திய விட்டுட்டீயோ

உன் பிரிவு என்ன வருத்த
வொலகமே சோகமா இருக்கோ

என் உசிர எடுத்து போனவனே
இந்த பிணத்த பாக்க வருவாயோ

Wednesday, December 06, 2006

நட்பு

அம்மையாய் வலியைத் தாங்கி
ஆதரவு தந்து ஊக்குவித்து
இன்பம்தனை பகிர்ந்து கொண்டு
ஈவிரக்கத்துடன் துக்கத்தில் பங்கெடுத்து
உரிமையுடன் கை கோர்த்து
ஊமையாகவே கதைகள் பலபேசி
எதிர்ப்பார்ப்பின்றி அன்பு சொரிந்து
ஏமாற்றங்களை தடவிக் கொடுத்து
ஐயமின்றி எண்ணங்களை சீர்திருத்தி
ஒற்றுமையாய் வாழ்நாளை கழித்து
ஓசையின்றி இயற்கையை ரசித்து
ஔவையைப் போல் வழிகாட்டி
அஃதே சேர்ந்திருப்பதாம் நட்பு

Saturday, December 02, 2006

மழை

புன்னகைப் பூத்த வானம்
பூப்பூவாய் வெண் மலர்களை
பூரித்து தூவ வேண்டியே
பூமியின் இறைஞ்சலை ஏற்று
மேகமாய் மிதக்கும் சிசுக்களை
வேகமாய் கனிவுடன் அழைத்து
கருநிறம் பூசிய கர்ப்பிணியாய்
வேடமிட்டு சிரிக்க வைத்தானாம்

உடல் குலுங்க சிரித்தவுடன்
தண்ணீர் குழந்தைகளாய் தூவிய
மழைத் துளிகளை அகப்படுத்தி
மனமகிழ்ந்து மணம் பரப்பி
சலங்கை கட்டிய நாட்டியத்தின்
அபிநய சந்தத்தின் சத்தத்துடன்
ஆட வைத்தே நெகிழ்ந்தாளாம்
பூமி என்னும் அன்னை

என் கவிதை

மயிலாய் ஒயிலாய் நடந்து
மணலாய் வெறுமையாய் விரிந்து
மலையாய் மெளனமாய் நின்று
மழையாய் அழகாய் பொழிந்து
மலராய் மணமாய் கமழ்ந்து
மரமாய் பசுமையாய் சிலிர்த்து
மணியாய் அருமையாய் சிரித்து
மகவாய் மிகவாய் மகிழ்ந்து
மகிழும் இளமை இயற்கையே

கல்லாய் கனியாய் இறுகி
கன்றாய் கண்ணீராய் தவித்து
காற்றாய் சடுதியில் கலந்து
கயிலையில் பனியாய் உறைந்த
கடவுளாய் காட்சி தந்தாலும்
கண்கொண்டு காண முடியாமல்
களிப்புடன் ஒளிந்தே விளையாடும்
கண்ணனாம் உன்னையே நினைத்து
காத்திருக்கும் தருணங்களில் தேடலில்
கவிதையாய் எழுதிய இவ்வரிகளே
கண்சிமிட்டி கைகொட்டி என்னைக்
கண்டே ஏளனமாய் சிரிக்கின்றனவோ