வினைதாங்கும் பார்வையினை விட்டோடும் அவசரத்தில்
பளீரிடும் மேடைச்சிரிப்புகளை ஒதுக்கும் ஆர்வத்தில்
எண்ணங்களெனும் முள்படுக்கையில் ஓரமாய் தலைசாய்த்தேன்
மௌனமான உணர்வுகளின் அதிவேக தாக்கத்தில்
நிலவின் குளுமையை உணரும் ஏக்கத்தில்
நிலம்பார்த்து கால்பதித்து எழுந்து நின்றேன்
அண்டமெனும் மாயைத் தாங்கிய உண்மையில்
பலவண்ண பூச்சிகளின் நளின நாட்டியத்தில்
கலைவண்ண முலாமின் மூலம்தனைக் கண்டேன்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து படபடத்த கண்களோ
கவியுலகிலே முத்துக் குளித்து நிலைத்தாலும்
நெஞ்சினுள் திணிக்காத பெருந்தன்மை உணர்ந்தேன்
அழியா அன்பின் கதவுகளை தொட்டுவிட
அருள்புரிந்து அரவணைக்கும் கைகளை பற்றிவிட
காலடிச் சந்தங்கள் பிறழ்வதில் வருந்தினேன்
வேடம் போடும் புத்திசாலி முகத்துடன்
சிகரத்தில் ஜொலித்த ஒளியின் பிரவாகத்தில்
வெறுப்புமிழா தேவதை முகமொன்றில் லயித்தேன்
காலத்தின் கட்டாயத்தை உடைத்தெறியும் பயணத்தில்
என்னன்பு நெய்தலில் உவகையுடன் கைக்கோர்க்க
சலிப்புணரா உயர் நட்பினைத் தேடியலைந்தேன்
சுட்டெரிக்கும் முகங்களை வழிமுழுதும் கண்டதால்
பாலைவனத் தனிமையை விருப்புடன் ஏற்று
சொர்க்கவாசல் காணும் கனவுடன் விரைந்தேன்
வேகநடை பயிலாத நானே இன்று
ஒற்றையடி பாதையில் மூச்சிறைத்து நின்றபோது
அன்புமுகம் மலர்வதில் மகிழ்ந்து சிலிர்த்தேன்
விதி செய்யும் விளையாட்டினை ஆராய்ந்து
சதியான எண்ணங்களில் இருந்து விடுதலையடைய
புறாவாய் சிறகினை விரிக்கத் துடித்தேன்
என்னுணர்வு புரிந்து தட்டிக்கொடுத்த முகத்தின்
கைகளை நன்றியுடன் பற்றிய வண்ணம்
கண்ணீர் மல்க மண்டியிட்டு முத்தமிட்டேன்
என்னகம் திரும்ப வேண்டியதை நினைவுறுத்தி
தனித்த பயணம் சோலையாய் திகழ
அம்முகம் எந்நெஞ்சிலே இறங்கியதில் கிளர்ந்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment