Thursday, September 20, 2007

அவனும் அவளும்

சந்தங்கள் போட்டியிட்டன அவள் விழியைக் கண்டு
சங்கதிகள் களைகட்டின அவன் உவகை கண்டு
சங்தேகங்கள் முளைத்தன அவள் அழகைக் கண்டு
சங்கேதங்கள் கலகலத்தன அவன் சிமிட்டல் கண்டு

சலசலத்தன இலைகளும் அவள் நாதம் கண்டு
சலாமிட்டன உலகம் அவன் சாதனை கண்டு
சலங்கைகளோ அணைத்தன அவள் பாதம் கண்டு
சலிப்புகளே ஓடினவே அவன் உற்சாகம் கண்டு

காலோசையும் மருண்டன அவள் மென்மை கண்டு
காலணிகள் நடுங்கின அவன் மேன்மை கண்டு
காலங்கள் தடுமாறின அவள் வெண்மை கண்டு
காலவனும் ரசித்தானே அவன் மதியைக் கண்டு

மாதுளை வெட்கின அவள் வண்ணம் கண்டு
மாதுக்கள் வியந்தனர் அவன் எண்ணம் கண்டு
மாதாவாய் போற்றினர் அவள் அன்பைக் கண்டு
மாதிரியாய் கொண்டனர் அவன் பண்பைக் கண்டு

சித்திரங்களே சிலிர்த்தன அவள் ரசனை கண்டு
சித்தங்களோ குளிர்ந்தன அவன் சிரிப்பைக் கண்டு
சித்திகள் குவிந்தன அவள் அடக்கம் கண்டு
சித்பவமாய் ஒளிர்ந்தானே அவன் கடமை கொண்டு

அவனியது போற்றியது அவளை நிலவாய் கண்டு
அவனியது காட்டியது அவனை ஆதவன் என்று
அவனியது விரும்பியது அதன் விளையாட்டில் ஒன்று
அவனும் அவளும் பார்த்தனரே விதியைக் கொண்டு

மோதலுக்கு அழைத்தானே அவளைக் கண்டு
மோதலிலும் கலங்கினாளே அவனைக் கண்டு
மோதுவதிலும் ஆனந்தம் இருவருமே கண்டு
மோதிரம் மாற்றினரே காதல் கொண்டு

Tuesday, September 18, 2007

துறவி யார்?



பிஞ்சு மலரே
கொஞ்சும் மொழியே
நெஞ்சக் கனியே
கெஞ்சும் கவியே

மழலை சிகரமே
குழந்தை செல்வமே
அழகு மாணிக்கமே
பழுதில்லா திலகமே

காலைப் பொழுதில்
பாலைக் குடித்தாய்
மாலை நேரத்திலோ
சிலையாய் அமர்ந்தாய்

விழுதாய் நீயிருந்தும்
பழுதான அநாதையானேன்
அழுதாலும் கலங்காமல்
எழுதாய் என்றாயே

பஞ்சமது வாட்டியதால்
தஞ்சமது அடைந்தாயோ
கஞ்சமில்லா அன்புடன்
அஞ்சாமல் சென்றாயோ

விண்ணின் ஆதவனே
மண்ணின் மைந்தனே
எண்ணம் சிறக்கவே
(இவ்)வண்ணம் ஏற்றாயோ

கண்களின் தீட்சண்யத்துடன்
கண்ணீரை துடைத்தாயே
கண்ணார செல்வத்தின்
கண்டேனே உயர்வதனை

புகைப்படத்தில் நிற்கும்
நகையோன் மகனே
சிகையில்லா துறவியான
என்னையும் பார் மகனே

Friday, September 14, 2007

விநாயகர் ஸ்துதி

உன் முகம் கண்டேனே
ஊழ்வினை களைந்தேனே
உன்னிடம் கற்றேனே
ஊக்கமது பெற்றேனே

நான்காம் நாள் பிறந்தோனே
நான்மறையில் சிறந்தோனே
அஷ்டதிக்கின் அதிபதியே
அண்டத்தின் முதல்பதியே

பூதகணங்கள் பூஜிக்கவே
பூவுலகம் செழித்திடவே
சித்திபுத்தி இருப்பிடமாய்
சிந்தனையின் பிறப்பிடமாய்

கர்மத்தில் ஒருகால் ஊன்றி
கடவுளாய் மறுகால் உணர்ந்து
வேதாந்தம் நினைவில் கொள்ள
செவியதனை காட்டினாயோ

வாய்பேச்சை வெட்டிவிட்டு
வாய்மைதனை பற்றியபடி
சிறுமை காணா கண்களாலே
தியானம் பயில சொன்னாயோ

நச்சுப் பல்லை பிடுங்கிவிட்டு
நல்ல எண்ணம் கொள்ள சொன்னாய்
குண்டலினி சக்தியைத்தான்
இடுப்பு பாம்பாய் காட்டினாயோ

செல்வச் செழிப்பு வயிறுடனே
என் நன்மை தீமை ஏற்றாயே
கட்டுக்கடங்கா மனதினையே
மூஞ்சூராய் அடக்குவாயோ

கோடாரியால் மாயை அழித்திட்டு
கயிறினாலே உன்வசம் இழுத்திட்டாய்
ருத்திராட்சம் கொண்டு ஜெபிப்போனை
உன்னருளால் நனைத்திட்டாயோ

நாதியற்றோரும் நாடிதனில்
இதபிங்கலம் உயிர்பித்து
சூட்சுமம்தனை அறிந்திடவே
தும்பிக்கை உயர்த்தினாயோ

ஓம்காரத்தின் நாயகனே
சிவசக்தி செல்வமகனே
எதுவுமே அல்பமில்லையென
அருகம்புல்லை ஏற்றாயோ

சித்திபுத்தி நாதனாய்
தெற்கில் நீ பிரம்மச்சாரியானாய்
க்ஷேமம் லாபம் தந்தையாய்
வடக்கிலோ நீ சம்சாரியானாயே

வேதவியாசரின் பாடல்களை
தந்தமுடைத்து எழுதினாயே
வேதமறியா இச்சிறுமியைதான்
உண்மையில் நிறுத்துவாயோ

கொழுக்கட்டை பிரீதியிலே
கோவிலென என்னில்லம் வந்தாய்
கொழுந்து விட்டெறியும் அறியாமையை
பொசுக்கிவிட்டு ரட்சிப்பாயோ

அகஅழுக்கை அழித்திட்டு
கம்பீர யானையாய் நிற்பேனா
தீயவைதனை மூழ்கிவிட்டு
தீபமாய் ஒளிவீசி திகழ்வேனா

தள்ளாமை வந்த போதிலும்
தவறாமல் உன் புகழ்பாடி
தவமிருந்து காத்திடவே
தவபுதல்வன் அருள்வாயோ

விக்னமுள்ள நாளெதுவும்
உன் பார்வையில் சிறந்திடுமே
கட்டியணைக்கும் இறப்பிலுமே
உன் நாமம் ஜெபிப்பேனா

பெற்றோரை வணங்கிடவே
உன்னிடமிருந்து கற்றேனே
பொறுமைதனை தந்திட்டே
உன்னகம் ஆட்கொள்வாயோ

Monday, September 03, 2007

கோகுலாஷ்டமி

அஷ்டமி திதி
ரோஹிணி நட்சத்திரம்
நள்ளிரவு நேரம்
இருண்ட சிறை
எட்டாவது குழந்தை
கருநீல உருவம்
இவையாய் நீ பிறந்தாய்

பல மனைகளில் வெண்ணெய் திருடி
எண்ணற்ற கோபியருடன் நடனமாடி
கணக்கற்ற மனைவியரை மணந்து
பற்பல அரக்கர்களை அழித்து
அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் அளித்து
தர்மயுத்தமென்ற பெயரில் பூபாரத்தை குறைத்து
யாதவர் குலத்தின் திமிரை ஒடுக்கி
உத்தவனுக்கு மீண்டும் ஞானபோதேசமளித்து
உலகினைவிட்டு மறைந்த கண்ணனே
உனக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

வந்திடுவாய் சிறு கண்ணனாய்
ஏந்திடுவாய் சிறு கைகளை
பற்றிடுவாய் என் கைகளை
பெற்றிடுவாய் என் சீடைகளை
கட்டிடுவாய் உன் அன்பினால்
வெட்டிடுவாய் என் அறியாமையை
தரித்திடுவாய் வெகுளிப் பார்வையை
சிரித்திடுவாய் என் மனமகிழ

கண்ணா நீ வருவாயோ – என்னை
காண தான் நீ வருவாயோ
கண்ணா நீ வருவாயோ – என்னை
காண தான் நீ வருவாயோ